தூக்கு ரத்து: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! பேரறிவாளனுடன் அற்புதம்மாள் சந்திப்பு!!
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ் உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். வேலூர் சிறையில் பேரறிவாளன், முருகன் ஆகியோரை அவரது உறவினர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது. மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் தமிழ் இன உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

சென்னை கோயம்பேட்டில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளுக்கு உணர்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பறை இசை ஒலித்து ஆடிப்பாடி மகிழ்ந்த தமிழ் இன உணர்வாளர்கள் தூக்கு கயிற்றுக்கு தீயிட்டு எரித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மதிமுகவினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உணர்வாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

பேரறிவாளனுடன் சந்திப்பு
இந்நிலையில் தீர்ப்பு வெளியான உடனேயே முருகனின் தாயார் சோமணி, மாமியாரும் நளினியின் தாயாருமான பத்மா ஆகியோர் முருகனை வேலூர் சிறையில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
பேரறிவாளனை சென்னையில் இருந்து சென்ற அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினரும் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications