கைதிகள், காவலர்களை வைத்து, சிறைக்குள் வைத்தே தீர்த்து கட்ட முயற்சி.. நிர்மலா தேவி பரபர குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: சிறைக்குள் வைத்தே தன்னை கொல்ல வாய்ப்பு உள்ளதாக பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகர் நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை மேலதிகாரிகளுக்கு நெருக்கம் காட்ட சொல்லி தவறான பாதையில் வழி நடத்த முற்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதேபோல வழக்கில் சிக்கியுள்ள முருகன், கருப்பசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 3 பேருக்கும் 1,360 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. மேலும் மூவருக்கும், செப்டம்பர் 19ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.
அப்போது, சிறையில் உள்ள தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி வாய்மொழியாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதை மனுவாக கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மனுவாக நீதிபதியிடம் நிர்மலா தேவி சமர்ப்பித்தார். அந்த மனுவில், வெளியில் இருப்பவர்களின் தூண்டுதலால் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிறை கைதிகள், சிறை காவலர்கள் மூலமாக உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நிர்மலாதேவி கோரிக்கைவிடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் மேலிடத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.