பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்- பல நகரங்களில் சாலை மறியல்!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் மே 17 இயக்கத்தினர் சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல நகரங்களில் காங்கிரஸ் கட்சியின் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது தொடர்பாக கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் 11 ஆண்டுகால ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமாகவும், குறிப்பாக, சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவும், அவர்களின் சொத்துகளையும், உரிமைகளையும் பறிக்கின்ற வகையில் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து, இன்று காலை 9.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதேபோல மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும், பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டுவோம் என அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். பல நகரங்களில் கறுப்பு கொடியுடன் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications