தூத்துக்குடியில் 7 நாட்களாக அகற்றப்படாத வெள்ளநீர்... பொதுமக்கள் மறியல்
தூத்துக்குடி: எட்டையபுரம் சாலையில் 7 நாட்களாக தேங்கியுள்ள மழை வெள்ள நீரை அகற்றக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி பெய்த கன மழையால் சுற்றுப்புறங்களில் இருந்த குளங்கள் உடைபட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. மாநகராட்சி நிர்வாகம் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தாத காரணத்தால் முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர், சவேரியார் புரம், அபிராமி நகர், அத்திமரப்பட்டி, பொட்டல்காடு பகுதிகளில் 7 நாட்களாகியும் மழை நீர் வடியாமல் வீடுகளைச் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் மதுரை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேங்கியுள்ள மழைநீரால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் வெள்ள நீரை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும், அப்பகுதியில் பன்றி மற்றும் கால் நடைகள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.