புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி - எம்.எல்.ஏ ஜான்குமார் ராஜினாமா
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட ஏதுவாக, அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத ஒருவர், முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ பதவியை ஏற்றுக்கொண்டால் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது விதியாகும்.
அந்த வகையில், இன்னும் 3 மாதங்களில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நாராயணசாமி. இவர் போட்டியிட ஏதுவாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அவர் இன்று காலையில் வழங்கினார். இதனை அடுத்து, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்க முதலமைச்சர் நாராயணசாமி டெல்லி விரைந்துள்ளார்.
முன்னதாக அவர், தனது பதவி விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். நாராயணசாமி அவர்கள் கட்சியை ஒருங்கிணைத்து சூறாவளி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு நான் எம்.எல்.ஏ தொகுதியை விட்டுத்தரவில்லை. என்னுடைய விருப்பம் தெருக்கோடியில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டுவருவதான்.
நான் விரைவில் நியமன எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் வருவேன் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஜான்குமார் கூறியுள்ளார். நாராயணசாமி மிகவும் சிறப்பான முறையில் பாண்டிச்சேரியை முன்னேற்றுவார் என்றும் கூறியுள்ளார். பாண்டிச்சேரிக்கு நல்லது நடக்கப் போகிறது என்றும் கூறியுள்ளார் ஜான்குமார்.