பேசியபடி சம்பளம் தராவிட்டால் ஆகஸ்டு 1 முதல் வேலை நிறுத்தம்: பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி அறிவிப்பு
பேசியபடி சம்பளம் தரப்படாவிட்டால் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்துள்ளார்.
சென்னை: ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி சம்பளத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகவே தொழிலாளர்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது.

இந்நிலையில், 'பில்லா பாண்டி' என்ற திரைப்படப் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் 2 நாட்கள் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே. செல்வமணி, ஒப்புக் கொண்டபடி சம்பளம் தரப்படாவிட்டால் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்தார். பொது விதிகள் குறித்து திரைப்படத் தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என்றும், தற்போது 35 படங்களின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் செல்வமணி தெரிவித்தார்.
இத்துடன் பெப்சியுடன் பணியாற்ற மாட்டோம் என்ற முடிவைத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப்பெற வேண்டும் என ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications