பதவிக்காக நெல்லையில் டிராமா போட்ட ராதிகா… எம்.பி. சீட்டுக்காக சீன் போட்ட சமக…
சென்னை: கூட்டணியில் கூப்பிடாவிட்டாலும் நாங்களும் இருக்கோம்ல என்று கூறி ஒட்டிக்கொள்வது ஒருவகை... மாநாடு என்ற பெயரில் மாஸ் காட்டி ஒரு சீட்டாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பது மற்றொருவகை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திடீரென்று இணைந்த சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், 2 தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக இப்போது மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அறிவித்து தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த மமக, புதிய தமிழகம் கட்சிகள் திமுக உடன் இணைந்து தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகின்றன. இதை கவனித்த சமக சரத்குமார், தனது திராணியைக் காட்ட நெல்லையில் மாநாடு போட்டார்.
திருச்சியில் திமுகவின் மாநாடு இறுதி நாளில், நெல்லையில் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தார் சரத்குமார் என்றே கூறலாம். இதுநாள் வரை கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி வகித்த ராதிகாவிற்கு மகளிர் அணித்தலைவி பதவி இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. அதற்கு ராதிகா மேடையில் போட்ட டிராமாவும், பேசிய வசனங்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது என்கின்றனர் மாநாட்டினை கவனித்தவர்கள்.
திருச்சியை மிரட்டனும்
திருச்சியில் திமுக இரண்டு நாள் மாநாடு அறிவித்த உடன் நெல்லையில் பிப்ரவரி 16ம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார் சரத்குமார். போஸ்டரிலேயே திருச்சியை மிரட்டும் நெல்லை என்றே அறிவித்திருந்தனர் சமகவினர்.
அதிமுகவிற்கு சப்போர்ட்
மாநாடு போட்டது என்னவே சமத்துவமக்கள் கட்சிதான். ஆனால் கட்சித்தலைவர் சரத்குமார் பேசியது 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும், ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்று பேசியது மேடையில் இருந்த சமகவினரையே கூச்சத்தில் நெளியவைத்துவிட்டது.
நானும் கொஞ்சம் மாமா….
நீங்க மட்டும்தான் பேசுவீங்களா? நானும் என் பங்குக்கு பேசுறேனே என்று கேட்ட ராதிகா, அதிமுக ஆட்சியைப் பற்றியும், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்.
கூட்டணி தர்மமாம்!
அதற்கு ராதிகாவே விளக்கமும் கொடுத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நல்ல ஒரு கூட்டணி, கொள்கை உள்ள கூட்டணி என்றால் மிகையாகாது. உடனே நிறைய பேர், 'என்னடா, கணவர்தான் அந்தம்மாவை புகழ்ந்து பேசிவருகிறார் என்றால், இவரும் அவரைப்போலவே புகழ்கிறாரே'னு சொல்றாங்க. நல்லாட்சி நடந்தா அதைப் புகழ்ந்து பேசுறதில் என்ன தவறு? கூட்டணி தர்மத்தை மதித்து நடப்பவர்கள் நாங்கள் என்று ஒரே போடாக போட்டார்.
நாடார் சிங்கம்ல….
அதோடு விட்டாரா... ''உங்களின் தலைவர் புரட்சித் திலகம், நாடார் சிங்கம். நான் தைரியமாக சொல்கிறேன். அவர் ஒரு நாடாராக இருப்பது அவருக்குப் பெருமைதான். அதுபோல் அவரால் நாடார் குலத்துக்குப் பெருமையே. அதனால் நாடார் சிங்கம் என்று சொல்லுங்க தவறில்லை! என்றார்.
புரட்சித்தலைவி
தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப்போறது இல்லை. இப்போது புரட்சித் தலைவி நல்லது செய்து வருகிறார். வரும் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நெல்லையில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கலாம். எது எப்படியோ நம்முடைய இலக்கு 2016-தான் அப்போது ச.ம.க இந்த நாட்டில் முதன்மை இடத்துக்கு வரும் என்றார்.
மகளிர் மாநாடு போடணும்
பேச்சோடு பேச்சாக.... பெண்களுக்கு என்று தனி மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என விரும்புகிறேன். அதுக்கு தலைவர் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து முடித்தார் ராதிகா.
மகளிர் அணித் தலைவி
இதுதான் சமயம் என்று மைக்கைப் பிடித்த சரத்குமார், ''பெண்கள் மாநாடு நடத்த வேண்டும் என்றால், கட்சியின் மகளிரணி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என கட்டளையிட்டார். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக எழுந்து நின்று அனைவரையும் பார்த்து கை கூப்பி நின்றார் ராதிகா. பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
என்னா டிராமா… என்னா டிராமா….
மேடையில் சற்று நேரத்திற்கு முன்பாகத்தான்... திமுக தலைவர் குடும்பத்தில் சீரியலை விட தினந்தோறும் ஒரு காட்சி அரங்கேறுகிறது என்றார். ஆனால் மகளிர் அணித்தலைவி பதவி வாங்குவதற்காக நெல்லை மாநாட்டு மேடையில் ராதிகா போட்ட சீன் இருக்கிறதே?... அப்பப்பா அதுதான் சூப்பர் என்கின்றனர் அவரது சீரியலை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள்.
ராதிகாவிற்கு எம்.பி சீட்
அதிமுக கூட்டணியில் இணைந்து தான் எம்.எல்.ஏ ஆனது போல தனது மனைவி ராதிகாவை மக்களவைத் தேர்தலில் எம்.பியாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த மாநாடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ மாநாடு முடியும் போது ராதிகாவுக்கு ஒரு எம்.பி சீட் பார்சேல்.... என்று சமக தொண்டர் ஒருவர் உரக்கச் சொன்னது காதில் விழுந்தது.