அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அக்.30-ல் ராகுல் பொறுப்பேற்பு?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 30-ஆம் தேதி பொறுப்போற்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 30-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 26-ஆம் தேதி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவரால் மட்டுமே காங்கிரஸை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர்.
தீபாவளிக்கு பிறகு அவர் பதவியேற்பார் என உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் விரைவில் பொறுப்பேற்பார் என்று சோனியாவே ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார்.
தெலுங்கானாவில் வரும் 2019-இல் நடைபெறும் பொதுத் தேர்தலுக்குள் காங்கிரஸை அப்பகுதியில் வலுவான கட்சியாக மாற்றுவதற்கான வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன. மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதனிடையே ராகுலை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 26-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.