சுங்க விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி.. சென்னை மழை நிவாரண பொருளுக்கு ரயிலில் கட்டணம் கிடையாது!
சென்னை: தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்திருந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கு ரயிலில் டிக்கெட் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.
நிவாரணப் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் கோரிக்கைவிடுத்தனர்.
கட்டண விலக்கு
இதன் அடிப்படையில், வெளிநாடுகளிலிருந்து வெள்ள நிவாரணத்துக்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்டவற்றுக்கான சுங்க கட்டணத்தை விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்புதல் தேவை
எனவே, வெளிநாட்டிலிருந்து மேற்கண்ட நிவாரணப் பொருட்களை பெறுவோர், இறக்குமதி செய்யும் பொருட்களின் விவரத்தை மத்திய நிதித்துறையிடம் முன்கூட்டியே தெரிவித்து அதற்கான ஒப்புகை கடிதத்தை பெற வேண்டும். அந்தக் கடிதத்தை சுங்கத் துறை அதிகாரிகளிடம் காட்டினால், பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விவரம் பெறலாம்
இதுபற்றிய கூடுதல் விவரங்களை பெற சுங்கத்துறை முதன்மை ஆணையரின் 044-22560406 என்ற எண்ணிலும், கூடுதல் ஆணையரை 8754551301 என்ற எண்ணிலும் இணை ஆணையரை 9789521852 என்ற எண்ணிலும், உதவி ஆணையரை 9443246440 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பு கூறுகிறது.
ரயிலில் இலவசம்
ரயில்வே கூறியுள்ளதாவது: நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அரசு அல்லது தனியார் என எந்த தரப்பு சென்னைக்கு நிவார பொருளை அனுப்பினாலும், அந்த பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.