கடலூரில் இடைவிடாத கொட்டும் மழையால் தவிக்கும் மக்கள் : நிவாரணம் கிடைக்காமல் தவிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். கடலூரில் இன்று காலைமுதலே கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் மழையால் கடலூர் மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

நவம்பர் 9ம் தேதி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் உடமைகள், வீடுகளை இழந்து நின்றனர் 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டு பெய்த நிலையில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தது.
விடாமல் கொட்டும் மழை
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவார காலமாக பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாயினர். இதேபோன்று மாவட்டத்தின் உட் பகுதிகளில் வசிப்போரும் சகதியில் இருந்தவாறு சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பெய்த மழையினால் மேலும் 13 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிவாரணம் இல்லை
இந்த நிலையில் ஆற்றங்கரையோரப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் மட்டுமே நிவாரணப் பணிகள் நடைபெறுவதாகவும், மாவட்டத்தின் உட்புறப் பகுதிகளான பண்ருட்டி,சிதம்பரம், குறிஞ்சிப்பாடி,நெய்வேலி சுற்று வட்டார கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நிவாரணப் பணிகளே நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சேதமடைந்த சாலைகள்
மழையால் சேதமைடந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மழையில் மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது சாலைகள். இதுவரை 210 கி.மீ தேசிய நெடுஞ்சாலையும், 485 கி.மீ மாநில நெடுஞ்சாலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கிறது. அவற்றை சரிசெய்ய மெக்கானிக்களும் கிடைக்காத பரிதாப நிலை நிலவுகிறது.
பராமரிப்பு பணி தீவிரம்
அதன்படி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள தற்போது உள்ள அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒரு கோட்ட பொறியாளர், 3 உதவி கோட்ட பொறியாளர்கள், 3 உதவி பொறியாளர்கள்,திருப்பூர் மாநகராட்சியிலிருந்து ஒரு செயற்பொறியாளர், 1 உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தலைமையில் 100 பணியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவி கோரிக்கை
இதனிடையே கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவி வழங்க மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் அழைப்பு விடுத்துள்ளார். கடலூர்-மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 04142-220956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications