தொடரும் கனமழை... கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் அணிவகுக்கும் படகுகள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தியுள்ளனர்.
வங்க கடலில் குமரி அருகே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இரவிலும் லேசான சாரலுடன் தொடங்கிய மழை போக போக காற்றுடன் கனமழையாக கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த கனமழை காரணமாக குருஸ் பார்னபாந்து சிலை அருகே பழமையான வட்ட தெப்பத்தில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல பேரி கார்டு அமைத்தனர். கடலில் பலத்த சூறை காற்றும், ஆக்ரோஷமாக அலையும் வீசுவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வரும் உப்பள வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் தீப்பெட்டி தொழிலும் முடங்கியது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு :-
கோவில்பட்டி 7 மிமீ, ஓட்டப்பிராடம் 16 மிமீ, சாத்தான்குளம் 61.4மிமீ, ஸ்ரீவைகுண்டம் 32.2 மிமீ, தூத்துக்குடி 83.4 மிமீ, திருச்செந்தூர் 97 மிமீ, விளாத்திகுலம் 40 மிமீ, கயத்தாறு 5 மிமீ, காயல்பட்டிணம் 150.3 மிமீ, குலசை 78 மிமீ, கீழ அரசடி 25.2 மிமீ, எட்டயபுரம் 1 மிமீ, கடம்பூர் 10 மிமீ, மணியாச்சி 10 மிமீ, வேடநத்தம் 90 மிமீ, சூரங்குடி 68 மிமீ, காடல்குடி 57 மிமீ, வைப்பாறு 50 மிமீ, கழுகுமலை 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டிணத்தில் 150.3 மிமீயும், குறைந்துபட்சமாக எட்டயபுரத்தில் 1 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.