மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை!
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியதால் சம்பா பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில், இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக உட்கட்சி தேர்தல்.. கே.சி.பழனிசாமிக்கு வழக்கு தொடர தகுதியில்லை..தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர்
நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய தொடங்கியிருந்தது இதனிடையே இன்று காலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு ,தரங்கம்பாடி, செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
நீரில் மூழ்கும் பயிர்கள்
குறிப்பாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி இருக்கக்கூடிய காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக நேற்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார் . தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
விவசாயிகள் வேதனை
இதனால் சம்பா பயிர்கள் அதிக அளவில் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆங்காங்கே உள்ள ஒரு சில வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் விட்டதால் மழை நீர் செல்ல வழி இன்றி விளைநிலங்களுக்குள் தண்ணீர் சூழ்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செருதியூர் ,நலத்துக்குடி, முளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது.
களத்தில் இறங்கிய விவசாயிகள்
இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்குள்ள மஞ்சள் ஆறு மற்றும் குப்பன் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை தானாக முன்வந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்தந்த ஊர் விவசாயிகளே இணைந்து வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் அடைப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.