சேலம் வாழப்பாடியில் திடீர் மழை… சூறைக்காற்றுடன் சுழற்றி அடித்து நொறுக்கியதால் மக்கள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் சூறைக் காற்றுடன் மழை அடித்து நொறுக்கியது. இதனால் வெயில் வாடிக்கிடந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருத்தம்பட்டி பாப்பநாயக்கன்பட்டியில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் அனல் காற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் குளு குளு மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர்.
பகல் 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. 10 மணிக்கு பின்னர் வெளியே யாரும் தலை காட்டுவதில்லை.
குளு குளு மழை
இந்நிலையில் நேற்று எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.
மகிழ்ச்சி
வறட்சியாலும் கடும் வெப்பத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கிணறுகளில் சற்று நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மீண்டும் மழை
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மீண்டும் மேக மூட்டத்துடன் காணப்பட்ட சேலத்தில் மழை அடித்து நொறுக்கியுள்ளது. வாழப்பாடி அருகில் உள்ள கருத்தம்பட்டி பாப்பநாயக்கன்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லிலும் மழை
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் நத்தம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.