மார்ச் 3ல் ஜில்லுன்னு மழை பெய்யுமாம்...வானிலையின் ஆறுதல் செய்தி
தமிழகத்திலும் பெங்களூருவிலும் மார்ச் 3ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி அளித்துள்ளது.
சென்னை: அக்னி போல வெயில் தாக்கி வரும் நிலையில் இன்னும் இரு தினங்களில் வெப்பம் தணியும் என்றும் மார்ச் 3 முதல் சென்னை, பெங்களூருவில் லேசாக மழை பெய்து குளுமை பரவும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் ஆறுதல் செய்தி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக்காலமும் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை.
பருவமழை பொய்த்துப்போன நிலையில் பல பகுதிகளில் 65% அளவிற்கு பற்றாக்குறை மழையே பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
சதமடித்த வெயில்
தை மாதமே வெயில் தலைதூக்கிவிட்டது. கடந்த சில வாரங்களாகவே வெப்பக்காற்று அனலாக வீசத் தொடங்கியுள்ளது. சென்னை, கரூர், சேலம், மதுரையில் வெயில் சதமடித்து வருகிறது.
குடிநீர் பிரச்சினை
வறட்சியும், வெயிலும் ஒரு பக்கம் வாட்டி எடுக்க தண்ணீர் பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது. கலர் கலராய் குடத்துடன் மக்கள் போராடத் தொடங்கி விட்டனர். கேன் தண்ணீர் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வானிலை மையம்
தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும், வடக்கு கடலோர மாவட்டங்களிலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் ஆறுதல் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது வானிலை மையம்.
சட்டென்று மாறும் வானிலை
அனல் வெப்பம் சற்றே மறைந்து ஜில் காற்று வீசும் என்று வானிலை மைய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மார்ச் 1 முதல் 9 வரையிலான வானிலை ஆய்வறிக்கையில் மார்ச் 3 முதல் சென்னை, பெங்களூருவில் லேசான மழை பெய்யும் என்று குளு குளு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மார்ச் 6 மார்ச் 9 ஆம் தேதியும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.