சின்ன "மக்" முதல் பெரிய "அண்டா" வரை.. எதையும் விடாத..!
சென்னை: பூமி பிறந்தபோது கூடவே பிறந்த உயிரினங்கள் எதுவுமே தனது இயல்பை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை. மனிதனைத் தவிர. ஆனால் சென்னை மக்களை ஒரு வாரத்திற்கு இயற்கையோடு இருந்து பாரேன் என்று கூறி விட்டது மழை..!
ஆர்.ஓ. கை கொடுக்கவில்லை.. கேன் வாட்டரும் விலை கொடுத்து மாள முடியவில்லை. கடைசியில் மக்களுக்குக் கை கொடுத்தது மழை நீர்தான்.
இந்த ஒரு வாரத்தில்தான் மழை நீரின் முக்கியத்துவத்தை மக்கள் ரொம்பவே உணர்ந்து அதை முறையாகவும் பயன்படுத்தி புதிய அனுபவம் பெற்றனர் என்றால் அது மிகையில்லை.
கரண்ட் இல்லை
நவம்பர் 30ம் தேதி பிற்பகலுக்கு மேல் பேய் மழை பெய்யத் தொடங்கியது. விடாமல் நிறுத்தி நிதானமாக வெளுத்தெடுத்த மழை போகப் போக வலுத்ததே தவிர சற்றும் தணியவில்லை. இதனால் சென்னை ஸ்தம்பித்தது.. கரண்ட் கட் ஆனது.
குடிக்கத் தண்ணீர் இல்லை
சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வது கேன் தண்ணீர்தான். அடுத்து ஆர். ஓ எனப்படும் அக்வாகார்ட் போன்ற நிறுவனங்களின் ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்.
இரண்டும் கட்
ஆனால் பெருமழையின்போது இந்த இரண்டுக்குமே பெரிய ஆப்பு வந்தது. மின்சாரம் இல்லாததால் ஆர்ஓவை இயக்க முடியவில்லை. அதேபோல கடைகளில் வாட்டர் கேன் கிடைக்கவில்லை.
கை கொடுத்த மழை நீர்
இந்த நிலையில் மழை நீர்தான் மக்களுக்குக் கை கொடுத்தது. மழை நீரைப் பிடித்து குடிக்க, பாத்ரூம், கழிப்பறை தேவைகள், பாத்திரம் துலக்க என மக்கள் இயற்கைக்கு மாறினர்.
ஒரு பாத்திரத்தையும் விடாதே
வீட்டில் இருந்த பெரிய பெரிய பாத்திரங்கள், டப்புகள், அண்டா, பெரிய பிளாஸ்டிக் டிரம் என எதையும் விடாமல் மக்கள் பயன்படுத்தி மழை நீரைப் பிடித்தனர். சாப்பிட்டுக் கை கழுவக் கூட மழை நீர்தான். ஒரு மக் கூட விடாமல் முடிந்தவரை மழை நீரைப் பயன்படுத்தினர் மக்கள்.
மழை நீர் வடிகால் பைப்பை உடை.. தண்ணீரைப் பிடி
அதைபோல மொட்டை மாடி தண்ணீர் திபுதிபுவென பிவிசி பைப்புகளில் வந்தபோது அதைப் பிடிக்க முடியாமல் போனபோது பைப்பை பக்கெட் வைக்கும் அளவுக்கு உடைத்து தண்ணீரைப் பிடித்த கதையும் நடந்தது.
மொத்தத்தில் கடந்த வாரத்தில் சென்னை மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்த அதே மழைதான்.. அவர்களின் தாகம் தீரவும் கை கொடுத்தது!