கனமழையால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது.. மயிலாப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி கழிவு நீருடன் மழை நீரும் புகுந்துள்ளதால் மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. புறநகர் மட்டுமல்ல நகரின் மையப்பகுதியாக உள்ள மைலாப்பூரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
காலையில் வெயிலடித்த நிலையில் பிற்பகல் 3 மணி முதல் மழை விடாமல் பெய்வதால் ராதாகிருஷ்ணன் சாலை அருகே சென்னை சிட்டி சென்டருக்கு பின்புறம் உள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வெள்ளம் செல்கிறது.

பக்கிங்காம் கால்வாயை ஓட்டியுள்ள ஏகாம்பரம் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீருடன் கழிவு நீரும் புகுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் தாக்கியது. அப்போதோ தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது மயிலாப்பூர்வாசிகளின் குற்றச்சாட்டாகும்.
நேரம் செல்லச் செல்ல வெள்ளம் உயர்ந்து கொண்டே வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றால் மட்டுமே அந்த பகுதிகள் தப்பிக்க முடியும்.
இதுவரை யாருமே வந்து பார்க்கவில்லை எந்த உதவியும் செய்யவில்லை என்பது ஏகாம்பரம் தெரு பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். மின்சார பெட்டிகளை பராமரிக்கவில்லை என்றும் மின்வயர்கள் தண்ணீருக்கு மேலேயே உள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காரணீஸ்வரர் பக்கோடா தெருவில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு நிற்கிறது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
மயிலாப்பூர் சாலைகளில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சிக்கி ஸ்தம்பித்து நிற்கின்றன.












Click it and Unblock the Notifications