18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை தவிர்த்திருக்கலாம் ... எடப்பாடி அணி எம்எல்ஏவின் பேச்சால் பரபரப்பு
18 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ததை தவிர்த்திருக்கலாம் என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை: தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பதிலாக 18 பேரையும் கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் அவர்கள் தனித்து சுயேச்சைகளாக செயல்பட்டிருப்பர் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்துக்கு ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் வரவேற்பளித்தாலும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மட்டும் மாறுப்பட்ட கருத்தை அளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எத்தனை நாள் பதவியில் இருக்கிறோம் என்பதைவிட என்ன செய்தோம் என்பதே முக்கியம். இதுவரை மதுரைக்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தும் அறிவிப்புகளை இன்னும் வழங்கவில்லை.
நிதி ஒதுக்கவில்லை
மதுரையில் உள்ளாட்சி நிதி ஒதுக்கப்படாமல், கடுமையான நெருக்கடியில் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நேரடியாக இருமுறை நினைவூட்டியும் இதுவரை வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக எந்த உத்தரவையும் முதல்வர் வழங்கவில்லை.
Recommended Video
தவிர்த்திருக்கலாம்
சசிகலாவை நீக்கியதில் எனக்கு விருப்பமில்லை என்பதைவிட, அவரை தவிர்க்கலாம் என்பதால்தான் தீர்மானத்துக்கு ஒப்புக்கொண்டேன். சட்டசபை விதிகளின்படி சபாநாயகர் முடிவு எடுத்திருக்கிறார் என்றாலும் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு பதிலாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம். அவர்கள் சுயேட்சைகளாக இருந்திருப்பர்.
பின்னர் யோசிக்கலாம்
அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பங்கேற்றிருக்கமாட்டார்கள். பின்னர் பிரச்சினை குறித்து பேசி தீர்த்து கொண்டு அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதா வேண்டாமா என்பது குறித்து யோசித்திருக்கலாம். நான் கூறுவது காலம் கடந்த யோசனைதான்.
வருத்தமாக உள்ளது
எங்களுடன் சேர்ந்து பணியாற்றிய 18 பேர் தற்போது இல்லை என்பதால் எங்களை போன்றவர்களுக்கு சபாநாயகரின் முடிவு வருத்தமளிக்கிறது. தகுதிநீக்கத்துக்கு பதிலாக நான் கூறுவதை போன்று மாற்று வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றார் அவர். எனினும் இந்த பேட்டியில் தினகரனை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
அதிர்ச்சி
சபாநாயகரின் நடவடிக்கைக்கு அவர்கள் தரப்பு எம்எல்ஏக்களும் , அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கருத்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.