எம்ஜிஆர்-கருணாநிதி போல இனி ரஜினி-கமல்தான் தமிழக அரசியலை ஆளப்போகிறார்களா? மக்கள் யார் பக்கம்?
சென்னை: திரையில் மட்டுமல்ல, அரசியல்களத்திலும் இப்போது ரஜினி, கமலுக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது. யார் முதலில் வருவது என்ற போட்டி நிலவியது. இந்த போட்டியில் கமல் முந்திக்கொண்டார். ஆனால், ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். ஆனால் இருவரிலும் மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள்.. போட்டி எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
1980களில் திரைத்துறையில் ரஜினி, கமல் ரசிகர்களிடையே இப்போது விஜய், அஜித் ரசிகர்களிடையே இருக்கும் போட்டி போல திரைப்படங்கள் வெளியாகும் போது தியேட்டர்களில் தூள் பறக்கும். அடுத்தடுத்து ரிலீசாகும் ரஜினி, கமல் படத்தில் எந்தப் படம் அதிக வசூல் படைக்கும் என்பதில் கடுமையான போட்டி இருக்கும். ஆனால் ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இரண்டு பேர படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ரஜினி, கமல் படங்கள் வெளியாகின.
திரைத்துறையைத் தொடர்ந்து தற்போது இருவரும் அரசியல் களத்திலும் ஒரே காலகட்டத்தில் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். கமல் நவம்பர் மாதத்தில் தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாக சொன்னார், அடுத்ததாக டிசம்பர் மாதத்தில் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று பிரகடனம் செய்துள்ளார்.

வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினியா, கமலா?
கமலுக்கும் ரஜினிகாந்துக்கும் நடிகர்கள் என்ற ஒற்றுமையைத்தவிர எல்லாவற்றிலும் ஒத்த கருத்து இருப்பதாக தெரியவில்லை. மதநம்பிக்கை, பகுத்தறிவு, பிரச்னைகளில் நிலைப்பாடு என கமல் ரஜினியைவிட பல மடங்கு வேறு மட்டத்தில் நிற்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இரு உச்ச நட்சத்திரங்கள் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவார்கள். ஆனால் அரசியல்களத்தில் முந்துவது யார் என்ற கேள்விக்குப்பதில் அவர்களின் அடுத்தகட்ட செயல்பாட்டில் உள்ளது.

கமலின் ஊழலுக்கு எதிரான முழக்கம்
தனது அரசியல் அறிவிப்புக்கு முன்பு டெல்லி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநில முதல்வர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். இடதுசாரி தலைவர்களுடன் நெருக்கமான உறவை வெளிக்காட்டினார் கமல்ஹாசன். ஊழலுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து தனது டுவிட்டரில் பதிவிட்டார். தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது கடுமையாக சாடி கருத்துக்களை கமல் சொல்லிவந்தார். கமலின் கருத்தாடல் பலரிடமும் வரவேற்பை பெற்றது. ஆனால், ரஜினி என்ன செய்தார்?

வெளிப்படையாக செயல்படாத ரஜினி
தமிழக மக்கள் பிரச்னைகளைச் சந்தித்த பல தருணங்களில் கமல் தயங்காமல் கருத்து சொன்ன நிலையில், ரஜினி அமைதிகாத்திருக்கிறார். குறிப்பாக விவசாயிகள் பிரச்னைகள், ஜல்லிக்கட்டு, ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு விவகாரம் போன்ற விவகாரங்களில் இருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்துள்ளன. பணமதிப்பிழப்பு அறிவிப்பை ரஜினி உடனே வரவேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். கமலும் தொடக்கத்தில் வரவேற்பு சொன்னார், ஆனால், பாதிப்புகளை கண்ட பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஜல்லிகட்டு போராட்டத்தில் கமல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரஜினி அந்தளவுக்கு ஆதரவை வெளிப்படுத்தவில்லை.

வலுவான தலைவர் தான் தேவை?
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், தைரியமான முடிவுகளை எடுக்கும், வலுவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் தலைவர்களுக்கான தேவை உள்ளது. இதற்கு முன்பு நாம் பார்த்த ரஜினி இனிமேல், தைரியமான அரசியல்வாதியாக பரிமாணம் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன செய்யப்போகிறார் ரஜினி?
அதேபோல், அரசியல் செலவுக்கான பணம் ரசிகர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினி இதுவரை வரவு செலவு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஊழல் ஒழிப்பு குறித்து பல அம்சங்கள் குறித்து கமல் வெளிப்படையாக பேசியுள்ளார். ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்யேக செயலி வெளியிடவும் கமல் முயற்சி செய்துவருகிறார்.
நடிகர்களாக திரையில் தோன்றி, நடிக்கும்போது வசனம் பேசும்போது இருவரையும் கைதட்டி வரவேற்ற தமிழக மக்கள், அரசியல்தலைவராக யார் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications