நதிகளை மீட்போம்.. ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ்
Recommended Video
சென்னை : ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்திருக்கும் 'நதிகளை மீட்போம்' திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளார்.
அழிந்து வரும் நதிகளை மீட்கவும், நதிகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவையில் 'நதிகளை மீட்போம்' என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கினார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்த இந்தப் பிரச்சார பேரணி அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது. தமிழகத்தில் கோவை, குமரி, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.
பலரும் ஆதரவு :
இந்தத் திட்டத்திற்கு விவசாய சங்கத் தலைவர்கள் பலர் இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலரும் இந்தப் பேரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனரர். தமிழக முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
1 கோடி ரூபாய் நிதி :
வாஜ்பாய் ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. சென்னையில் காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக ரஜினிகாந்த் உண்ணாவிரதமிருந்தார். அப்போது நதி நீர் இணைப்புதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என வலியுறுத்தியவர், அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பதிய வைக்கும் விதத்தில், நதிநீர் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் ஆளாக தானே 1 கோடி ரூபாய் நிதி தருவேன் எனக் கூறினார்.
நதிநீர் இணைப்பு :
மேலும் அதற்கான பல முயற்சிகளில் பங்கேற்க முன்வருவதாகவும் கூறினார் ரஜினிகாந்த். அதைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து நதி நீர் இணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு பல ஆண்டுகள் முன்பே நதி நீர் இணைப்பு குறித்து மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகள் பேசி வந்தாலும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, நதி நீர் இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்தன.
|
மீண்டும் வாய்ஸ் :
நதிநீர் இணைப்பு குறித்த பேச்சுகள் வறட்சிக்காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது பேசப்பட்டாலும், செயல்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை இல்லை. இந்நிலையில்தான், ஜக்கி வாசுதேவ் 'நதிகளை மீட்போம்' என்கிற பெயரில் இந்தியா முழுவதும் பேரணியைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நதிகள் இரத்த நாளங்கள் :
'இரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் இரத்தநாளங்கள்... அதைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதியாக்க சத்குரு எடுக்கும் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்' என வீடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.