நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கும் ரஜினி!
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்கள் கேட்கும் பல நூறு கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
கர்நாடகத்தில் பல வருடமாகவே தமிழர்கள் தொடர்ந்து அடிபட்டார்களே. அப்போதெல்லாம் ஏன் "பச்சைத் தமிழன்" ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை. கர்நாடகத்தை கடுமையாக கண்டிக்கவில்லை. போராடவில்லை என்ற கேள்வி அதில் முதல் கேள்வியாக இருக்கும். சும்மா ஒப்புக்காக சில முறை குரல் கொடுத்தாரே தவிர கர்நாடகத்தை அவர் ஒருமுறை கூட சீரியஸாக கண்டிக்கவில்லை.
ஏன் கடந்த வருடம் காவிரியின் பெயரால் பெங்களூரிலும், கர்நாடகத்தின் இதர பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமான வன்முறைக்காக அவர் பார்மாலிட்டிக்காக கூட பொங்கவில்லை என்பதை அனைவருமே பார்த்தார்கள். தமிழக மக்கள் சாகிறார்கள். தண்ணீரைத் திறந்து விடு என்று ஒருமுறை கூட அவர் கர்நாடகத்தை அதட்டியதில்லை. தமிழகத்தை விட்டால் வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன் என்று இன்று தைரியமாக கூறும் ரஜினி, அப்போது ஏன் கர்நாடகத்தைக் கண்டிக்கவில்லை. ஆந்திராவைக் கண்டிக்கவில்லை. கேரளாவைக் கண்டிக்கவில்லை.?
எதற்கெடுத்தாலும் ரஜினியைக் குறை சொல்வதா என்று கேட்கலாம், பச்சைத் தமிழன் நான் என்று ரஜினியே இன்று பகிரங்கமாக கூறி விட்டார். எனவே மிக மிக உரிமையுடன் இந்த கேள்விகளை ரஜினி முன் எடுத்து வைக்கலாம். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உண்டு. தமிழன் என்று கூறிக் கொண்டு மக்களை இனியும் யாரும் ஏமாற்றக் கூடாது, ஏமாற்றவும் முடியாது.
தறுதலை அரசியல்வாதிகள்
காமராஜருக்குப் பிறகு, அண்ணாவுக்குப் பிறகு தமிழகத்திற்கு வாய்த்த தலைவர்களை தலைவர்கள் என்று கூறவே முடியாது. நிச்சயம் நாம் எதிர்பார்த்த பலரும் கூட நிறையவே ஏமாற்றி விட்டனர். தமிழ், தமிழர் என்று கூறிக் கூறியே தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், தமிழர்களின் பெருமையையும், அவர்களின் உழைப்பையும் நாசப்படுத்தி, சுரண்டி அழித்து விட்டனர். இதுதான் உண்மை. தறுதலை அரசியல்வாதிகளையே இத்தனை காலமாக தமிழக மக்கள் கண்டு வந்தனர்.
நல்ல தலைவருக்காக ஏக்கத்தில்
உண்மையில் ஒரு நல்ல தலைவருக்காகத்தான் தமிழக மக்கள் அத்தனை பேரும் காத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக நல்லகண்ணு போன்ற தலைவர்களெல்லாம் தமிழக மக்களின் கண்ணில் படாமல் போய் விட்டனர். ஏன் என்பது மிகப் பெரிய புதிர். இப்படி நல்லது எது, கெட்டது என்பதை பகுத்தறிய முடியாத (அதைப் பற்றி சிந்திக்க விடாமல்தான் செய்து விட்டனரே தறுதலை அரசியல் தலைவர்கள்) நிலையில் தமிழக மக்கள் இருப்பதால்தான் யார் யாரோவெல்லாம் கட்சி, முதல்வர் பதவி என்று கற்பனைக் குதிரையேறி சவாரி செய்யும் நிலை உள்ளது.
விஜயகாந்த்
மக்கள் நல்ல தலைவருக்காக ஏங்கிக் கொண்டிருப்பதை வைத்துத்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ஆனால் இதுவரை கண்ட அரசியல் வியாபாரிகளிலேயே மிகச் சிறந்த வியாபாரியாக அவர் மாறியதுதான் மிச்சம். இப்போது அவர் அரசியலை விட்டே ஓரம் கட்டப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார் அதே மக்களால்.
இன்று ரஜினி
இன்று ரஜினி தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். அதற்கு அடித்தளமாக நான் தமிழன், பச்சைத் தமிழன் என்று பேசியுள்ளார். எல்லாம் சரிதான். தமிழகம் தன்னை நம்பி வந்த யாரையும் கைவிட்டதில்லை, உயர்த்தத் தவறியதும் இல்லை. ஆனால் அந்தத் தமிழகத்திற்காக எதையுமே செய்யாமல், அந்தத் தமிழகம் கஷ்டப்பட்டபோதெல்லாம் எதையுமே பேசாமல் இருந்து விட்டு இப்போது நான் பச்சைத் தமிழன், பிரவுன் தமிழன் என்று கூறுவதுதான் இயல்பானதாக தெரியவில்லை.
என்னவெல்லாம் செய்திருக்கலாம்?
இன்று இத்தனை பேசும் ரஜினிகாந்த், இதுவரை காவி விவாகரத்தில் செய்தது ஏன். சத்யராஜ் அளவுக்குக் கூட அவர் எதையும் செய்ததில்லை. அந்த சத்யராஜுக்கு கர்நாடகத்திலிருந்து மிரட்டல் வந்தபோது கூட அமைதிதானே காத்தார் ரஜினிகாந்த். பச்சைத் தமிழன் என்று கூறும் ரஜினிகாந்த் இதுவரை தமிழகத்திற்காக செய்தது என்று பட்டியலிட்டால், பல ஆயிரம் பேருக்கு அவர் செய்த தனிப்பட்ட முறையிலான உதவிகளை மட்டுமே அதில் பார்க்க முடியும் என்பதே நிதர்சனம்.
பதில் சொல்ல வேண்டும்
ரஜினியே கூறுவது போல தமிழக மக்கள்தான் அவரை தமிழனாக்கினார்கள். உயர்த்தியுள்ளார்கள். ஆனால் அவர்தான் இதுவரை அந்த தமிழர்களுக்காக - தேவைப்பட்ட நேரத்தில் - குரல் கொடுத்ததில்லை. தமிழக விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்ததில்லை, போராடியதில்லை. உண்மையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நிறைய கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.