ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு.. ரசிகர்களை விட அதிக குஷியில் எடப்பாடி பழனிச்சாமி!
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் மிகுந்த குஷியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் புயல் தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளதால், பல வகைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நன்மையே ஏற்படப்போகிறது.
ஆர்.கே.நகரில் ஒருவேளை தினகரன் தோல்வியுற்றிருந்தால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இப்போது ரஜினி வருகையை நினைத்து மகிழ்ந்திருக்க தேவையிருந்திருக்காது. ஆனால், எப்போது தங்களுக்கு தேவையோ அப்போது ஆபத்பாண்டவராக வந்துள்ளார் ரஜினி என நினைக்கிறது ஆளும் தரப்பு.

தினகரன் செல்வாக்கு
ஆம்.. ஆர்.கே. நகர் வெற்றிக்குப் பின் டிடிவி தினகரனுக்கு அதிமுகவினரிடையே பெரும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. அதிமுக கட்சியை கூட கைப்பற்றும் அளவுக்கு கீழ்மட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக திரண்டு வந்தனர். இந் நிலையில் ரஜினியின் வருகை தேர்தல் களத்தில் தினகரனை பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஊடகங்கள் எல்லாமே தினகரனை பேசி வந்த நிலையில், இப்போது, ரஜினிகாந்த் பேசுபொருளாகியுள்ளார்.

தினகரன் தரப்பு கர்புர்
ரஜினிகாந்த்தின் திடீர் அரசியல் அறிவிப்பால் தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பு இப்போதைக்கு தினகரன் தரப்பாகத்தான் இருக்க முடியும். இதனால் தினகரன் தரப்பு கோபத்திலுள்ளது. தினகரனின் திடீர் மாஸ் இப்போது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதில் ரஜினிகாந்த் பங்கு அதிகம். தினகரனின் திடீர் எழுச்சி, பாஜக தரப்பை பெரும் கடுப்பாக்கி ரஜினியை தேர்தல் அரசியலில், தள்ளிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

சசிகலா தரப்பு எதிர்காலம்
இன்னொரு விஷயமும், ரஜினியின் வருகையால் அவரது ரசிகர்களை விட எடப்பாடி பழனிச்சாமியை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டுள்ளது. அதுதான் ஆட்சிக்கான உத்தரவாதம். தினகரன் திடீரென விஸ்வரூபம் எடுத்தது எடப்பாடிக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில், சசிகலா தரப்பின் அரசியல் எதிர்காலத்தை ரஜினி கேள்விக்குறியாக்குவார் என்ற நம்பிக்கையில் எடப்பாடி ஹேப்பியாம்.

ஆட்சிக்கு ஆபத்தில்லை
இதுமட்டுமல்ல. ரஜினிகாந்த் அரசியல் ரீதியாக முழு வீச்சில் தயாராகி வலுவான கட்சியை உருவாக்கும்வரை எடப்பாடியின் ஆட்சியை பாஜக காத்து நிற்கும் என்பது எடப்பாடி தரப்பினரின் அபார நம்பிக்கை. இது எடப்பாடிக்கு கிடைத்துள்ள பெரிய நிம்மதி. ஆர்.கே.நகரில் அதிமுக தோற்றதால் பாஜக அக்கட்சி தலைவர்கள் மீது கோபத்தில் இருந்தது. குருமூர்த்தியின் மோசமான வார்த்தை பிரயோகம் அதற்கு நல்ல உதாரணம். இப்போது, பாஜக கோபத்திலிருந்து தப்பிவிட்ட சந்தோஷமும் எடப்பாடி அணியின் குதுகலத்திற்கு காரணமாம்.












Click it and Unblock the Notifications