ராஜ்யசபா தேர்தல்: 7 சுயேட்சைகள் மனுக்கள் தள்ளுபடி-அதிமுக, திமுக 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு
சென்னை: ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுயேட்சைகளின் வேட்புமனுவை 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழியாத காரணத்தால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 4 அதிமுக எம்.பிக்கள், 2 திமுக எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய ராஜ்யசபா கட்சித் தலைவரான நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஜூன் 11ம் தேதி அந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் வைத்திலிங்கம், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதியும் போட்டியிடுகின்றனர்.
கடந்த 24ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்த தேர்ததில் தேர்தல் மன்னன் பத்மராஜன், மங்கூன் பி.நடராஜன் உட்பட 7 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சுயேட்சை வேட்பாளர்களின் மனுவை ஏற்க, 10 எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்ய வேண்டும். ராஜ்யசபா எம்.பி., ஆக, 33 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட வேண்டும். இரண்டும் சாத்தியமில்லை எனில் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். இதன் அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 4 அதிமுக வேட்பாளர்களும், 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
எஸ்.ஆர்.பி , நவநீதகிருஷ்ணன் பேட்டி
இதனிடையே ராஜ்சபா எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட உள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர், தமிழக மக்களின் பிரச்சினைக்காக ராஜ்யசபாவில் குரல் கொடுப்போம் என்று தெரிவித்தனர்.