ராம் ஜெத்மலானியிடம் ரூ.7 கோடி மோசடி?: போலீஸ் கமிஷனரிடம் புகார்
முன்னாள் மத்திய அமைச்சரான ராம்ஜெத் மலானி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். மதியம் 1.45 மணி அளவில் 2 நண்பர்கள் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றார்.
உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். பின்னர் உடனடியாக அவர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கேட்டபோது, ‘‘காவல் நிலைய சீரமைப்பு கமிட்டியில் நான் உள்ளேன். அது தொடர்பாக விவாதிக்க இங்கு வந்தேன்'' என்று கூறினார்.
ஆனால் சூளை மேட்டைச் சேர்ந்த நில புரோக்கர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி தருவதாக கூறி ராம்ஜெத் மலானியிடம் ரூ.7 கோடி மோசடி செய்ததாகவும், அதுபற்றி புகார் செய்ய அவர் கமிஷனர் அலுவலகம் வந்ததாகவும் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு கமிஷனர் உத்தர விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர். ஆனாலும் மோசடி புகார் உண்மை எனவும், போலீசார் இதனை மறைக்கிறார்கள் என்றும் இன்னொரு தரப்பினர் உறுதிப்படக் கூறினர்.