வணிக நோக்கத்துடன் நாட்டுப்படகுகளை அனுமதிக்கவில்லை.. கச்சத்தீவு திருவிழா பற்றி ராமதாஸ் பேச்சு
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளை அனுமதிக்காதது வணிக நோக்கம் கொண்ட செயல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாயல திருவிழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல தமிழக அரசு தடைவிதித்து இருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அவ்விழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித் திருக்கிறது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்களின் நூற்றாண்டு கால உரிமையை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
கச்சத்தீவு விழாவுக்கு விசைப்படகுகளில் மட்டும் தான் செல்ல வேண்டும் என்று கூறுவதன் பின்னணியில் வணிக நோக்கம் உள்ளது. நாட்டுப்படகுகளில் ஏழை மீனவர்கள் மிகக்குறைந்த செலவில் கச்சத்தீவுக்கு சென்று வர முடியும்.
ஆனால், விசைப்படகுகளில் சென்று வர வேண்டுமானால் அதிக செலவாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்களால் கச்சத்தீவுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்படும்.
இதையெல்லாம் கடந்து கச்சத்தீவு பயணத்தை விசைப்படகுகள் மற்றும் சிறிய வகை கப்பல்களைக் கொண்டு நடத்தப்படும் சுற்றுலாவாக மாற்றவும், அதன்மூலம் பெருமளவில் வருவாய் ஈட்டவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கு நாட்டுப்படகுகள் பெருந்தடையாக இருக்கும் என்பதால் தான் அவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்தோணியார் விழாவில் பங்கேற்க நாட்டுப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் கச்சத்தீவுக்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் எந்த வித அனுமதிச் சீட்டும் இல்லாமல் சென்று வர கச்சத்தீவு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த உரிமை பறிக்கப்படுவதற்கு தமிழக அரசே துணை போகிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்காக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் ராமேஸ்வரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications