காமராஜரும், கக்கனும் இருந்த பதவிகள் இப்படியா களங்கப்பட வேண்டும்! - ராமதாஸ் வேதனை
முதல்வர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க வருமானவரித்துறை முடிவு செய்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காமராஜரும் கக்கனும் இருந்த பதவிகள் இப்படியா களங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்து டிவிட்டியுள்ளார்.
அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
இன்றும் தொடரும் ரெய்டு
இந்நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் அவருக்கு சொந்தமான குவாரிகளில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். இதேபோல் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
ராமதாஸ் டிவிட்
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்களிடம் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இப்படியா களங்கப்பட வேண்டும்!
அதாவது முதல்வர், அமைச்சர்களை விசாரிக்க வருமானவரித்துறை முடிவு செய்திருப்பதற்கு காமராஜரும், கக்கனும் இருந்த பதவிகள் இப்படியா களங்கப்பட வேண்டும்! என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆவணங்கள்
அண்மையில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயர் அடங்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் வேலுமணி, நிதியமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தொடர்புடைய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
|
விசாரிக்க திட்டம்
இவர்களின் பெயரோடு, இவர்கள் கவர வேண்டிய ஓட்டுகளின் எண்ணிக்கை, அதற்காகச் செலவிட வேண்டிய தொகையும், அவர்களிடம் வழங்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.