சபதத்தை நிறைவேற்றிய ராமதாஸ்… விஜயகாந்துடன் மேடை ஏறவில்லை
சென்னை: தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக ஆகிய பெரிய கட்சிகளும்,கொங்குநாடு கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய சிறிய கட்சிகளும் இணைந்துள்ளன.
பாஜக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் சுமூகமாக முடிந்துள்ளது. யாருக்கு எந்தத் தொகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து மேடை ஏறி கரங்களை கோர்த்து சம்பிரதாய போஸ் கொடுக்கவேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக, பாமக, தேமுதிக பாஜக என நான்கு பெரிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சித் தலைவர்களில் பாமகவும், தேமுதிகவும் பரம வைரிகளாக வடமாவட்டங்களில் உலா வருகின்றன.
நடிகருடன் கூட்டணி வைக்க மாட்டேன்... மேடை ஏற மாட்டேன் என்று பகிரங்கமாகவே தொண்டர்களிடம் சொன்னவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது சென்னையில் இன்று நடைபெற்ற சம்பவங்கள்.

விரும்பாத ராமதாஸ்
ராமதாஸை பொருத்தவரை பாஜக உடனான கூட்டணி கட்டாய கல்யாணம்தான். வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவுக்கும் பாஜக கூட்டணியில் குறிப்பாக தேமுதிக உடன் இணைந்து பணியாற்ற துளியும் விருப்பமில்லை.

அன்புமணி, ஜி.கே.மணி
அதே சமயம் அன்புமணி ராமதாசும், பாமக தலைவர் ஜி.கே.மணியும்தான் ஆரம்பம் முதலே பாஜக உடனான கூட்டணியில் ஆர்வம் காட்டி வந்தனர். அதேபோல தொகுதிப் பங்கீட்டில் சில விட்டுக்கொடுத்தல்களுக்கும் ஒத்துக்கொண்டார் அன்புமணி.

ராஜ்நாத்சிங் வருகையில்
சென்னை வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க கூட்டணித் தலைவர்கள் வைகோ, விஜயகாந்த், உள்ளிட்டவர்கள் வந்தனர். ஆனால் பாமகவில் இருந்து ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.

மேடையில் அன்புமணி
செய்தியாளர்களை சந்தித்து ராஜ்நாத்சிங் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடும் போது அருகருகே அமர்ந்து விஜயகாந்தும், வைகோவும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அன்புமணி ராஜ்நாத்சிங்கிற்கு மறுபுறம் அமைதியாக அமர்ந்திருந்தார்.

நிறைவேறிய சபதம்
கூட்டணித் தலைவர்கள் அனைவரும் முதன் முதலாக மேடை ஏறிய போது பாமக நிறுவனர் ராமதாஸ், சொன்னது போலவே மேடை ஏறவில்லை. இதே நிலை தொடருமா? அல்லது பொதுக்கூட்ட மேடையில் கூட்டணித் தலைவர்களுடன் ராமதாஸ் மேடை ஏறுவாரா? என்பது பாமகவினருக்கே புரியாத புதிராக உள்ளது.

அன்றும் இதே நிலை
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவையில் ஜெயலலிதா உடன் மேடை ஏறவில்லை. ஆனாலும் கூட்டணி ஜெயித்து முதல்வர் ஆனார் ஜெயலலிதா. இன்று பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் மேடை ஏறாமல் தவிர்த்து விட்டார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications