காவிரியின் குறுக்கே புதிய அணையா? பாமக தடுத்து நிறுத்தும்.. ராமதாஸ் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டினால் பாமக தடுத்து நிறுத்தும் என்று கர்நாடக மாநில அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,000 கோடியில் 60 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணையை கட்டப்போவதாகவும், இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்து விட்டதாகவும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான, உச்சநீதிமன்ற நீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

Ramadoss opposes New dam build in Across the river of Cauvery

காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு என்பதால் கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய பாசனத் திட்டங்களையோ, வேறு திட்டங்களையோ கர்நாடகம் செயல்படுத்தக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக கூறியுள்ளன. இத்தகைய சூழலில் தமிழகத்தின் அனுமதி பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் ரூ.5000 கோடியில் புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது.

அதுமட்டுமின்றி, மேகதாது அணை முதல்கட்டமாக 2000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேகதாது அணையில் 60 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவை விட அதிகமாகும். கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49 டி.எம்.சி மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

ஆனால், புதிய அணையில் அதைவிட 11 டி.எம்.சி கூடுதலாக 60 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கலாம். கிருஷ்ணராஜசாகர் அணை மட்டுமே இருந்த காலத்திலேயே தமிழகத்திற்கு உரிய அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது அதைவிட இன்னொரு மடங்குக்கும் அதிகமான அளவு தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டுக்கூட தண்ணீர் கிடைக்காது. அதன்பின் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சை பகுதி பாலைவனமாக மாறிவிடக்கூடும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசின் நிதி நிலை அறிக்கையில் ஓராண்டுக்கு முன்பே ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே மேகதாது அணைத் திட்டத்தை தடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

அதேபோல், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த இரு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதேநேரத்தில், கர்நாடகத்தில் நிலைமை தலைகீழாக இருந்தது.

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு 3 முறை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது. பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த, கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களை கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா வீடு தேடிச் சென்று சந்தித்தார். இப்போது கூட மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவதாக கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்திருப்பதாகவும், அதனடிப்படையில் அடுத்த இரு வாரங்களில் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் தற்போது காபந்து அரசு தான் நடைமுறையில் உள்ளது என்பதால், தலைமைச்செயலர் தலைமையிலான குழு தில்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

மேகதாது அணைத் திட்டத்தைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறது. மேகதாது சிக்கல் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பலமுறை பேசிய பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் பலமுறை சந்தித்து மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதையேற்ற மத்திய அமைச்சர் உமாபாரதி கடந்த 09.06.2015 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் உதவியுடன் அடுத்து பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாது சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+