தமிழக அரசியலில் சூறாவளி வரும்... 200 தொகுதிகளில் பாமக வெல்லும்...: ராமதாஸ்
சென்னை: தமிழக அரசியலில் இன்னும் ஒருமாதத்திற்குள் பயங்கர சூறாவளி வீசும் என்றும் இது பாமகவிற்கு ஆதரவானதாக இருக்கும் என்றும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் பாமக வென்று ஆட்சியமைக்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன. அவ்வப்போது ஊடகங்களில் பேட்டியளித்து தங்களின் நிலையை வாக்காளர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர் அரசியல் கட்சித்தலைவர்கள்.
இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பலவித கேள்விகளுக்கு பதிலளித்தார். பாமக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கூறினார்.
கவுரவக்கொலை
ஜாதி ஆணவக்கொலை பற்றி கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், கொலையை யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அது கவுரவக்கொலை என்பது மட்டுமல்ல. ஒரு உயிரை கொல்வது கண்டிக்கத்தக்கதே. இதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன் என்றார்.
நடுநிலை வாக்காளர்கள்
தமிழகத்தில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் எங்களுக்குச் சாதகமாகவே வாக்களிப்பார்கள். திமுக, அதிமுக வாக்கு வங்கி இருந்தாலும் மாற்றம் வேண்டும் என்று நடுநிலை வாக்காளர்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
பாஜக கூட்டணி
பாஜக உடன் பாமக கூட்டணி சேருவது எங்களின் வேட்பாளர்களுக்கு விருப்பமில்லை. எங்களின் நிபந்தனைகளை ஏற்று, எங்களின் தலைமையை ஏற்றால் மட்டுமே கூட்டணியில் சேர்ப்பது பற்றி முடிவெடுப்போம் என்றார்.
திமுக - அதிமுக
பாமகவை தலைமையை ஏற்று அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டாலும் திமுக கூட்டணியில் சேரமாட்டோம்.
இது அதிமுகவிற்கு அதை விட அதிகமாக பொருந்தும் என்றார் ராமதாஸ்.
இது பலமுனை போட்டியே இல்லை
60 சதவிகித வாக்காளர்கள் இன்றைக்கு மாற்றத்தை விரும்புகின்றனர். இளைமையான, முன்னேற்றத்தை விரும்புகிற அன்புமணிக்கு வாய்ப்பு குடுப்போம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். எனவே அவர்களின் வாக்கு எங்களுக்குக் கிடைக்கும்.
ஓட்டுக்குப் பணம்
திருமங்கலம் ஃபார்முலா, ஸ்ரீரங்கம் ஃபார்முலா என ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
தொங்கு சட்டசபை வராது
ஒருவேளை பலமுனை போட்டியால் தொங்கு சட்டசபை வந்தால் திமுக, அதிமுக யாருக்கு ஆதரவு தருவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், நாங்கள் 200 சட்டசபை தொகுதிகளில் வெல்வோம். 34 தொகுதிகள் போனால் போகட்டும் என்று எதிர்கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்போம் என்று ஒரே போடாக போட்டார்.