ராம்குமார் மட்டும்தான்.. வேறு யாரும் இல்லை.. போலீஸ் திட்டவட்ட நம்பிக்கை!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் மட்டுமே திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் உறுதிபடக் கூறுகிறார்கள்.
சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு முறை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, தான்தான் கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்தன.
இருப்பினும் மறுபக்கம் ராம்குமாருக்கு ஆதரவான குரல்களும் இருந்தபடியே உள்ளன. அவரது வக்கீல்களும் அவருக்காக தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் முக்கிய விசாரணைகளை முடித்து விட்டனர்.
ஆதாரங்கள் திரட்டல்
வழக்குக்குத் தேவையான அனைத்து ஆதராங்களையும் போலீஸார் திரட்டி விட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கப்பட்டு விட்டதாம்.
தடயவியல் சோதனை
ஆனால் அதை விட முக்கியமான தடயவியல் சோதனை முடிவுகளைத்தான் தற்போது போலீஸார் எதிர்பார்த்துள்ளனர். இது மட்டுமே ராம்குமாருக்கு எதிரான வழக்கில் முக்கியமானதாக அமையும் என்பதால் இதைத்தான் போலீஸார் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
சிசிடிவி படங்கள்
முக்கியமாக போலீஸார் ஆரம்பத்தில் வெளியிட்ட சிசிடிவி படங்களையும், ராம்குமாரின் படத்தையும் ஒப்பிட்டு அதில் கிடைக்கும் முடிவு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒத்துப் போனால் மட்டுமே வழக்கு நிற்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்.
ரத்த மாதிரிகள்
அதேபோல ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தக் கறை, அரிவாளில் படிந்த ரத்தக்கறை, சுவாதியின் ரத்தம் ஆகியவை ஒத்துப் போகிறதா என்ற சோதனை முக்கியமானது.
முடிவு வந்தால் தெரியும்
இந்த முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். அதில் ராம்குமாருக்கு எதிரான எங்களது நிலைப்பாடு உறுதியாகும் என்று போலீஸார் உறுதிபட நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
ராம்குமார் மட்டுமே
மேலும் ராம்குமாருக்கு மட்டுமே இதில் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமே திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது.