ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை... ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பதற்றம்!
சென்னை: மருத்துவக் குழு மற்றும் நீதிபதி முன்னிலையில் இன்று ராம்குமாரின் உடல் கூறு பரிசோதனை ராயப்பேட்டை மருத்தவமனையில் நடைபெறுகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரித்தனர். இதனையடுத்து ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்களும் பெற்றோர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டங்களையும் செய்தனர்.
இதனிடையே , ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவ குழு முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று 4 மருத்துவர்கள் கொண்ட குழு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த உடற்கூறு பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
இதனையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.