சேது மண்ணுக்கு பெருமை சேர்ப்பாரா "சக்தி"?
Recommended Video

கமல் ஹாசன் இந்திய சினிமாவில் தமிழகத்தின் அடையாளமாக அறியப்படும் திரைக் கலைஞன். திரைப்படத் துறையில் புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிவில் முதலில் அறிமுகப்படுத்தியவர்.
நல்ல சினிமாவை நோக்கி தமிழ் பட தயாரிப்புகள் நகர்ந்து கொண்டிருந்தபோது, 'சகலகலா வல்லவன்' என மசாலாவைப் புகுத்தி பிரளயம் கிளப்பியவர் கமல். பின்னாளில் நாயகன், தேவர் மகன் போன்ற நல்ல படங்களில் நடித்து பிரமிக்க வைத்தவரும் அவரே.

சிந்தனையில் கம்யூனிஸ்டாக இருந்தாலும், சினிமா தயாரிப்புகளில், திட்டமிடலில் நேர்த்தியான ஒழுங்கு முறைகளை தனது ராஜ்கமல் நிறுவனத்தில் அமல்படுத்துவதில் முதலாளித்துவ அணுகுமுறையை ஸ்ட்ரிக்டாகக் கடைப்பிடித்த கமலஹாசன், இன்று கட்சி தொடங்குகிறார் மதுரையில்.
இந்துவான கமல் இஸ்லாமியரான அப்துல் கலாம் பிறந்த வீட்டில் தன் அதிகாரபூர்வ அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். அங்கிருந்து புறப்படும் கமலஹாசன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கு எதிராகப் பொங்கி கண்ணகி எரித்த மதுரை நகரில் கட்சியின் பெயரையும், கொள்கையையும் இன்று மாலை அறிவிக்க இருக்கிறார்.
தமிழக அரசியல், இந்திய அரசியல் வரலாற்றில் ஒன்றுபட்ட ராமநாதபுரத்தைத் தவிர்க்க முடியாது. தமிழகத்தை ஆண்ட முதல் அமைச்சர்களில் அப்பழுக்கற்ற, சுயநலம் இன்றி மக்கள் நலன், மாநில நலனுக்கு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ராஜபாளையம் குமாரசாமி ராஜா, விருதுபட்டி (விருதுநகர்) காமராஜர் ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்டத்துக்காரர்கள்தான்.
இந்திய பிரதமரை இரண்டு முறை தீர்மானிக்கும் சக்தி படைத்த தலைவராக காமராஜர் இருந்த போது தன் உயரம் அறிந்தும் தான் அமராமல் தகுதியானவர்களை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தவர் காமராஜர்.
இந்திய நாடாளுமன்றத்தில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்குரிய நிதியமைச்சர் ப சிதம்பரம் ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர்தான்.
தெய்வீகம் மூலம் தேசியம் பேசிய முத்துராமலிங்க தேவர், தலித் உரிமைக்காக போராடிய இனப் போராளி இம்மானுவேல் அவதரித்ததும் இம்மாவட்டத்தில்தான்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய சேது பூமியாம் ராமநாதபுரத்தில் அவதரித்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் பிறந்த வீட்டில் ஆசிர்வாதம் பெற்று அரசியல் பயணம் தொடங்கியிருக்கிறார் கமல்.
இவர் கட்சி பெயர், கொள்கைகள் என்ன? இது எதுவும் தெரியாமல் இவரது அரசியல் பயணம் தமிழக அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் அளவுக்கு இவரது தாக்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை.
இடதுசாரி கட்சிகள் மட்டுமே இவரது அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மொழி அரசியலை, திராவிட அரசியலை முன்வைத்து கடந்து நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இரண்டும் வந்து பார் என கூறுவதை விட்டு விட்டு எதிர்ப்பது ஏன்?
காங்கிரஸ் குடும்பத்துக்காரரான கமல் இடதுசாரி சித்தாந்தங்களை தன் படங்களில் பேசி வந்திருக்கிகிறார். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் அடக்கமாவது வாடிக்கை. கமல் பயணம் எந்தப் பாதையில் என்பது இனிதான் தெரியும். ஆனால் அவர் எதிர்த்து களமிறங்க வேண்டியது பெரும் கார்ப்பொரேட்டுகளைத்தான்.
தமிழகத்தில் நீர் மேலாண்மை மேம்பட அது சம்பந்தமான ஆக்கிரமிப்புகள் பாரபட்சமற்று அகற்றப்பட வேண்டும்
கல்வி ஜனநாயகமாக்கப்பட, தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
மேம்படுத்தப்பட்ட மருத்துவம் ஏழை மக்களுக்கும் தடையின்றி கிடைக்க தனியார் மருத்துவ வியாபாரம் கட்டுப்படுத்தபட்டு அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும்
ஊழல் மலிந்த அரசு நிர்வாகம் மறுபுனரமைப்பு செய்யப்பட்டாக வேண்டும்.
இவை அனைத்திலும் பெரு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. இவற்றை கமல் எதிர்கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் எதிர்பார்க்கும் தரமான இலவச கல்வி, எல்லோருக்கும் மேம்படுத்தப்பட்ட மருத்துவம், நல்ல குடிநீர்... இவை எல்லோருக்கும் கிடைத்துவிட்டால் நாட்டில் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். இதில் கமல் நிலைப்பாட்டை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.
இந்திய அரசியலில் தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த ராஜபாளையம் குமாரசாமி ராஜா, நீர் மேலாண்மைக்கு அடித்தளம், மற்றும் எல்லோருக்கும் கல்வி கிடைக்கக் காரணமான காமராஜர் போல, அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த "சக்தி" செயல்படுவாரா, உயர்வாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
- ராமானுஜம்












Click it and Unblock the Notifications