என் ஃபோட்டோவை வெளியிடாதீங்க.. ஜெ. கேட்டுக் கொண்டதாக சொல்கிறது அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா தன்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
சென்னை; எம்சிஏ விதிகளின்படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிட வில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். 75 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, ஒரு மாநிலத்தின் முதல்வரான ஜெயலலிதாவிற்கு 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவரது மரண அறிக்கையை தமிழக அரசும் அப்பல்லோ நிர்வாகமும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசும் அப்பல்லோ நிர்வாகமும் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெ. விருப்பப்படி…
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த மனுவில் மறைந்த ஜெயலலிதாவின் விருப்பப்படியே அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும், எம்சிஏ விதிகளின் படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீலிடப்பட்ட உரை
மறைந்த ஜெயலலிதாவிற்கு உரிய முறையில் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சீலிடப்பட்ட உரையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்த விவரங்களை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அறிக்கை கேட்டால் மனு
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டால், அதனை அளிக்காமல் மனு ஒன்றை அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது.