23 ஆண்டில் 23வது டிரான்ஸ்பர்:ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மாற்றத்தின் பின்னணியில் அமைச்சர் கோகுல இந்திரா!
சென்னை: நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கோ ஆப்டெக்ஸ் துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு காரணம் அமைச்சர் கோகுல இந்திராவுடனான மோதல்தான் என்று கூறப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது, நாட்டை உலுக்கிய கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தியவர் சகாயம். ஆனாலும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெரும் நட்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் துறைக்கு இயக்குநராக இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபத்தில் நடத்திக் காட்டினார்.
கோ ஆப்டெக்ஸ் துறையின் அதிகாரியாக பொறுப்பேற்ற போது அமைச்சராக இருந்த சுந்தரராஜனின் எந்த ஒரு நெருக்கடிக்கும் பணிந்து போகாதவராக செயல்பட்டார். அதனால் அமைச்சரே ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால் அவருக்குப் பின்னர் வந்த கோகுல இந்திரா, சகாயத்தை தனக்கு கீழ்படிந்த ஒரு அதிகாரியாக மாற்ற நெருக்கடி கொடுத்துப் பார்த்து முடியாமல் போகவே இடமாற்றம் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சகாயத்துக்கும் கோகுல இந்திராவுக்குமான மோதலின் பின்னணி இது:
- கோ ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் அமைச்சர் என்கிற முறையில் தமக்கும் ஒரு அறை ஒதுக்க கேட்டுப் பார்த்தார் கோகுல இந்திரா.
- சகாயமோ, நீங்கள் இங்கு வரும் போது இயக்குநரான என்னுடைய அறையையே பயன்படுத்தலாம்.. தனி அறை ஒதுக்க வேண்டியதில்லை என்று பதில் கொடுத்திருக்கிறார்.
- கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர்களுக்கு கார்களை வழங்க கோகுல உத்தரவிட்டார்.
- அப்படியெல்லாம் கார் கொடுத்தால் செலவுதான் அதிகரிக்கும். தீபாவளியின் போதுதான் அவர்களுக்கு கார் தேவைப்படும். அப்போது மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் சகாயம்.
- பிற மாநில கோ ஆப்டெக்ஸ் கடைகளை வாடகைக்கு விடும் விவகாரத்தில் அமைச்சர் சொன்ன நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட மறுத்துவிட்டாராம் சகாயம்.
- தீபாவளி விற்பனை தொடர்பான ஆய்வுக் கூட்ட நாளில் சகாயத்தின் மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அந்த கூட்டத்தில் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு கோ ஆப்டெக்ஸ் நிர்வாகத்தை வெளூத்து வாங்கினாராம்.
- அதன்பின்னர்தான் சகாயத்தை வேகமாக தூக்கியடித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.