தேமுதிக, பாமக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிகவைச் சேர்ந்த திருத்தனி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அருண் சுப்ரமணியம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் அணைக்கட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம், இரு எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7 தேமுதிக எம்.எல்.ஏக்கள்
தேமுதிகவைச் சேர்ந்த சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன், மாபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் பாண்டியன், சாந்தி, சுரேஷ் குமார் ஆகியோர் அங்கிருந்து தாவி அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
8 வது எம்.எல்.ஏ
இந்த வரிசையில் எட்டாவதாக திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியமும் இணைந்துள்ளார்.
நில அபகரிப்புப் புகார்
திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மு.அருண்சுப்பிரமணியம். இவருக்கு சொந்தமாக வரதராஜ நகரில் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நகராட்சி இடத்தையும் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கைதும் தலைமறைவும்
ஜனாதிபதி தேர்தலில் தான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. என்ற முறையில் வாக்களிக்க வேண்டும் என கூறி கோர்ட்டில் ஜாமீன் பெற்று அருண் சுப்பிரமணியம் வெளியே வந்தார். பின்னர் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். போலீசார் கடந்த 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.
முதல்வருடன் சந்திப்பு
பின்னர் மீண்டும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்த மருமகன் மாயமான வழக்கில் அருண் சுப்ரமணியம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தொகுதி வளர்ச்சிக்காக இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
பாமக எம்.எல்.ஏ
தேமுதிக, புதிய தமிழகம் கட்சியைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியிலும் அதிமுக தற்போது ஆதரவு அணி உருவாகியுள்ளது. பாமக எம்.எல்.ஏ. கலையரசன் இன்று முதல்வரை சந்தித்து பேசினார்.
பொதுக்குழு புறக்கணிப்பு
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழுவை புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போதே அதிருப்தியில் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
மூவரில் ஒருவர்
சட்டசபையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காடுவெட்டி குரு, கலையரசன், கணேஷ்குமார் ஆகிய மூவரில் தற்போது அணைக்கட்டு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கலையரசன் அதிமுக ஆதரவு நிலையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.