நெல்லையில் பரவும் டெங்கு காய்ச்சல்.. அரசு மருத்துவமனைக்கு ரெட் அலெர்ட்!
நெல்லை அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ரெட் அலெர்ட் போடப்பட்டுள்ளது.
நெல்லை : காய்ச்சல் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவனைக்கு படையெடுத்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதையடுத்து ரெட் அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக டெங்கு காய்ச்சல் தலை தூக்கி வருகிறது. சமீபத்தில் கேரளாவில் அதிக அளவில் இந்த காய்ச்சல் பரவியதை அடுத்து தமிழகத்தில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், களக்காடு, நெல்லை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசுக்களின் பெருக்கத்தால் இந்த காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 64 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவர்களுக்காக தனி காய்ச்சல் வார்டு திறக்கப்பட்டுள்ளது. இவர்களில் குழந்தைகள் உள்பட 24 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உஷார் நிலையிலும், தயார் நிலையிலும் உள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் வார்டில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.