செளதியில் இருந்து ஈரானுக்குள் நுழைந்த 5 தமிழக மீனவர்கள் கைது- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில்: செளதியில் இருந்து ஈரானுக்குள் திசைமாறி நுழைந்ததாக 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனவர்களை ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜூடு, கன்னியாகுமரியை சேர்ந்த ஜில்டு, அழிக்காலை சகாய ஆன்றோ, ஆரோக்கிய சகாய பிரிட்டோ, சின்னவிளை எட்வின்ராஜ் ஆகிய 5 மீனவர்கள் செளதி அரேபியாவில் 2014-ம் ஆண்டு முதல் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
கடந்த மாதம் 25-ந் தேதி செளதியின் கப்தீப் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென திசைமாறி ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். எல்லை தாண்டி நுழைந்ததாக ஈரான் கடற்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தகவலை மீனவர்கள் 5 பேரும் ஊரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சிலிடம் தெரிவித்தனர்.
அவர் இன்று மீனவர்களின் குடும்பத்தாருடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட நிர்வாகத்திடமும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சர்ச்சில், இந்திய தூதரகம் மூலமே மீனவர்களை மீட்க முடியும். ஆகையால் இதை மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.