7 தமிழர் விடுதலையில் மத்திய அரசுதான் முடிவெடுக்கும்.. கை கழுவிய அமைச்சர் சண்முகம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும் என்று சட்ட அமைச்சர் சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர். இவர்களது விடுதலை குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும் என்று சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சண்முகம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் ஒப்புதலின்றி விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது என்று அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

ராபர்ட் பயஸ் கருணை கொலை
தொடர்ந்து பேசிய தமீமுன் அன்சாரி, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் கருணை கொலை செய்துவிடுமாறு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கட்சி பாகுபாடின்றி குரல் கொடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டார்.

திருமுருகன் காந்தி விடுதலை
மேலும், மே 17 இயக்கத்தின் திருமுருகன் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமீமுன் அன்சாரி சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

பரோல் மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர்களது பெற்றோர் முதுமை மற்றும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்கக் கூட பரோல் கொடுக்க மறுத்து வருகிறது சிறைத்துறை.

சிறை மாற்றம்
அதே போன்று, வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு தன்னை சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்று நளினி கோரி வருகிறார். அப்போதுதான் அவரது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று கேட்டுள்ளார். அதனையும் கூட ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது சிறைத்துறை.

விடுதலையை உறுதி செய்
இந்நிலையில், அவர்களின் விடுதலைப் பற்றி எல்லாம் தமிழக அரசுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். உடனடியாக 7 பேரின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications