ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்க மறந்த கேள்விகள்!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினியிடம் வழக்கம் போல சில கேள்விகளை செய்தியாளர்கள் கேட்க மறந்து விட்டனர். ஒரு வேளை கேட்டிருந்தால், அவற்றுக்கு ரஜினி நேரடியாக பதிலளித்திருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.
ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வெளியே நின்றபடி பேட்டி கொடுத்தார். என்ஆர்சி உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அந்தக் கேள்விகளுக்கு நீளமாக பதிலளித்தார் ரஜினிகாந்த். என்ஆர்சி, தூத்துக்குடி கலவரம் தொடர்பான விசாரணைக் கமிஷன் சம்மன், மாணவர்கள் போராட்டம், அரசியல் கட்சிகள், கந்து வட்டிப் புகார் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
தனக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பதிலளித்தார் ரஜினி. இருப்பினும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
சபாஷ்.. பாஜகவுக்கு ஒரு செம சப்போர்ட்டர் கிடைத்து விட்டார்.. ரஜினியை முழுசா பயன்படுத்தலாம்!
3 பேர் துப்பாக்கியால் சுட்டார்களே
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதுதொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதில் ஈடுபட்ட இருவர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று ரஜினி சொல்கிறார். ஆனால் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க நடந்த இந்த சம்பவங்கள் குறித்து ரஜினியிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை.
என்பிஆர் விளக்கம்
அதேபோல என்பிஆர் குறித்தும் செய்தியாளர்கள் தெளிவாக ரஜினியிடம் குறுக்கு கேள்விகள் கேட்கவில்லை. அதாவது என்பிஆர் கட்டாயம் தேவை . அது எடுக்கப்பட்டாக வேண்டும். அதை எதிர்க்கக் கூடாது என்று ரஜினி கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் எந்த அம்சத்தை எதிர்க்கின்றன, அதற்கான காரணம் என்பதை சுட்டிக் காட்டி ரஜினியிடம் குறுக்கு கேள்வி கேட்டு அதற்கு அவரது கருத்தை செய்தியாளர்கள் பெறவில்லை.
வேறுபாட்டை சுட்டிக் காட்டி
அதாவது காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட என்பிஆர் வேறு, இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர் வேறு. மத்திய அரசு புகுத்தியுள்ள சில புதிய அம்சங்களைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அதுகுறித்த ரஜினியின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்கவில்லை. கேள்வியும் மேலோட்டமாக இருந்தது. ரஜினி பதிலும் மேலோட்டமாகவே இருந்தது.
ஆவணக் குழப்பம்
மேலும் இந்த என்ஆர்சியின் கீழ், ஒருவர் தனது குடியுரிமையை நிரூபிக்க பல ஆவணங்கள் கோரப்படுகின்றன. அதைக் காட்டாவிட்டால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடையாது. முகாமில் அவர்கள் அடைக்கப்படுவார்கள். பாட்டன் பூட்டன் காலத்து ஆவணங்களை எங்கு போய் பெறுவது என்பதில் குழப்பம் உள்ளது. அதுகுறித்து ரஜினி தெளிவாக விளக்கம் தரவில்லை. அதுகுறித்து செய்தியாளர்களும் தெளிவாக கேட்கவில்லை.
எல்லாமே தூண்டுதலா
அதேபோல நாட்டில் நடக்கும் அத்தனை போராட்டமும் கட்சிகள் தூண்டி விட்டுத்தான் நடக்கிறது என்பது போல ரஜினி பேசியுள்ளார். இதுவும் தவறான வாதமாகவே தெரிகிறது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடுவதையும், தூண்டுதலால் நடப்பது போல அவர் குறிப்பிடுகிறார். அதை விட முக்கியமாக போலீஸார் எப்படி நடந்துப்பாங்கன்னு சொல்ல முடியாது என்று அவர் கூறியது மாணவர்களுக்கு விடப்படும் மறைமுக மிரட்டல் போலவே தெரிகிறது.
தர்பார் விவகாரம்
அதேபோல, தர்பார் படம் தொடர்பாக சில சர்ச்சைகள் வெடித்துள்ளன. படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக ரஜினியைப் பார்க்க போயஸ் கார்டனுக்கும் வந்தனர். ஆனால் அவர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர். இந்த சர்ச்சை தொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ரஜினியும் பதில் தரவில்லை.
இதெல்லாம் இன்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்க மறந்த சில கேள்விகள்.. இன்னும் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்படவில்லை.. அவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.!