குடியரசு தினம்… நெல்லையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
நெல்லை: குடியரசு தின விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா நடக்கிறது. நெல்லையில் குடியரசு தினம் பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் கருணாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து தியாகிகள் கவுரவிக்கப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் மக்கள் கூடும் இடங்களான பாளை மார்க்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது. முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் குடியரசு தின விழாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் இந்தாண்டு முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தினவிழாவான இன்று உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கூடங்குளம் அணு மின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.