நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்ற கோரிக்கை
நெல்லை: நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் அட்டவணையை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து நெல்லை, ஓசூர் செல்ல தினசரி ரயில் முன்பு இல்லை. தூத்துக்குடியில் இருந்து செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸை பிடித்து பெங்களூரு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை, நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வந்தது. பெங்களூருவில் இருந்து தினசரி இயக்கப்படும் இந்த ரயில், பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ராசிபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நெலலைக்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பெங்களூருக்கு மறுநாள் காலை 9.05 மணிக்கு போய் சேருகிறது.
இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் கூறுகையில்,
தமிழகத்தின் கடைசி மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் 11 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. தமிழகத்தில் அதிக மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ரயிலாக இந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளது. இதனால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை விட கூடுதல் முக்கியத்துவம தர வேண்டும். இந்த ரயில் தற்போது காலை 9.05 மணிக்கு போய் சேருகிறது. பின்னர் குளித்து முடித்து விட்டு அலுவலகம் போய் சேர கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவத்தனர்.