செமல்ல.. தமிழகத்தில் முதல்முறையாக.. விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் நிழற்குடையுடன் கழிப்பறை
விருத்தாசலம்: தமிழகத்தில் முதல்முறையாக கழிவறையுடன் கூடிய பயணியர் நிழற்குடை விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை வழியாக பல நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த 22 கி.மீ. தூர சாலையை கடந்து செல்ல பயண நேரம் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி ரூ 136 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இறுதியில் முடியும்
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இது இந்த மாத இறுதியில் முடிவடையும் என தெரிகிறது. விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா முதல் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே 100 மீட்டருக்கு முன்பு வரை 22 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையில் அதிக வளைவுகள் உள்ளன.

விபத்தை ஏற்படுத்தும் அபாயம்
இதனால் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சந்தித்து சிறுகாயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் இந்த சாலையை நேரான சாலையாக மாற்றுவதற்கான பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அந்த வழியில் உள்ள குடியிருப்புகள், விளை நிலங்களை கையகப்படுத்த ரூ 20 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மங்கலம்பேட்டை
மங்கலம்பேட்டை நகருக்குள் வாகனங்கள் நுழையாமல் இருக்க 5 கி.மீ. தொலைவிற்கு பள்ளிபட்டு பகுதியில் புறவழிச்சாலை தொடங்கி பில்லூர் சாலையில் முடிகிறது. இதன் மூலம் சென்னை- திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மங்கலம்பேட்டை நகருக்குள் சுற்றிக் கொண்டு செல்லாமல் புறவழிச்சாலை வழியாக எளிதில் செல்ல முடியும்.

கூட்ட நெரிசல்
எனவே கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் எளிதாக பயணிக்க முடியும். விபத்துகளும் தடுக்கப்படும். தற்போதுள்ள ஒப்பந்ததாரர் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார். சாலை பணி முடிந்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையே உள்ள 22 கி.மீ. தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் வாகன ஓட்டிகள் கடக்க முடியும். இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக 34 இடங்களில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.

கழிப்பறை
அந்த நிழற்குடையுடன் ஆண், பெண் இருவரும் இயற்கை உபாதைகளை கழிக்க வசதியாக நவீன கழிவறை கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இது போல் முதல்முறையாக கட்டப்படுகிறது. இந்த திட்டம் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இது போல் மற்ற நெடுஞ்சாலைகளிலும் கட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications