ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: வாக்குறுதிகளை அள்ளி விட்ட டிடிவி தினகரன், தீபா
ஆர்.கே.நகர் தொகுதியின் 57 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நவீன படகுகள் தருவேன் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தனது தேர்தல் அறிக்கையில் ஆர்.கே. நகர் தொகுதிவாசிகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். 57000 வீடுகள், பல்நோக்கு மருத்துவமனைகள், நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவினால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.
•தங்களுக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் இதுவரை விண்ணப்பித்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியின் 57 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
•ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்) அமைக்கப்படும்.
•10 பல்நோக்கு மருத்துவமனைகள் (பாலி கிளினிக்ஸ்), 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
•வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம் ஆர்.கே.நகர் தொகுதியில் நிறுவப்படும்.
•இத்தொகுதி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாழ்வு வளம்பெற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
•இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயன்பெற அரசு மற்றும் வங்கி சார்ந்த பணிகளுக்கான இலவச பயிற்சி மையம் நிறுவப்படும்.
•இத்தொகுதி இளைஞர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) அமைக்கப்படும்.
•கொடுங்கையூர் எழில் நகரில் குப்பை சேகரிக்கும் மையம் மாசு இல்லாத நவீனப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படும்.
•உலகத்தரம் வாய்ந்ததாகவும், நவீனமானதாகவும், மீன் வியாபாரிகளின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதாகவும் அமையும் புதிய மீன் அங்காடி கட்டித்தரப்படும். •மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் வ.உ.சி. நகரில் இருக்கும் மீன் மார்க்கெட் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி சீரமைத்துத் தரப்படும்.
•எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ரயில்வே சந்திப்பு பகுதியில் ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படும்.
•அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று திறக்கப்படும்.
•வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
•முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் வாரந்தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
•41வது வட்டம் பாரதி நகரில் ரூ.9.9 கோடி செலவிலும், 47வது வட்டம் சி.பி. சாலையில் ரூ.2 கோடி செலவிலும் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
•அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனை நவீன மயமாக்கப்பட்டு மேலும் விரிவுபடுத்தப்படும்.
•பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளுக்கு வல்லுநர்களின் அறிவுறுத்தலின்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, போதிய அழுத்தத்தோடு குடிநீர் விநியோகம் செய்யப்படும். புறநகர் காவல் நிலையமும் அமைத்துத் தரப்படும். இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தரப்படும்.
•அரசு மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் அனைத்தும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ளதால், புதிய வங்கிக் கிளைகள் எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
•கைலாச முதலி தெருவில், அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் சுமார் 400க்கு அதிகமான குடிசைவாசிகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
•இளைய முதலி தெரு முழுவதும் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் (பிரின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு) பாதாளச்சாக்கடை இணைப்புகள் விரைந்து வழங்கப்படும்.
•ஜெயலலிதா பெரிதும் நேசித்த விளையாட்டுத் துறையில் இத்தொகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ஆலோசனை மையங்கள் நிறுவப்படும்.
•மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண அம்மாவின் கனவு திட்டமான ''விஷன் ஆர்.கே.நகர்' என்ற கைப்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்படும்.
•இத்தொகுதிக்கான வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க தண்டையார்பேட்டை பஸ் டிப்போ பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
•இந்தப் பகுதியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பணிகள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
•மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவன செய்யப்படும்.
•இத்தொகுதியில் வாழும் இளம் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பு மகளிர் கூடம் அமைத்து சிறு தொழில் பயிற்சிகள் வழங்கவும், அவர்கள் சுயமாக தொழில் தொடங்கவும் கடனுதவிகள் வழங்க ஆவண செய்யப்படும்.
•மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்கள் வாழ்வாதாரம் உயர்ந்திட மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.
திருநங்கைளுக்கு சிறப்பு சுயஉதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
•38வது வட்டத்தில் நேரு நகரில் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. வட்டம் 47ல் உள்ள பாரதி நகரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் நிறைவேற்றப்படும். அதுபோலவே வட்டம் 47ல் உள்ள அரிநாராயணபுரத்தில் பசுமை பூங்கா திறப்பதற்கான பணியும் விரைந்து நிறைவேற்றப்படும்.
•தனியார் வாடகை இடத்தில் இயங்கி வந்த எச்-4 காவல் நிலையம் மற்றும் எச்-6 காவல் நிலையங்களுக்கென அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
•ஜெயலலிதாவின் ஆணைப்படி இத்தொகுதிக்கான சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி, அங்கு பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படும்.
•ஐ.ஓ.சி. பேருந்து நிறுத்தத்தை, புதிய வழித்தட பேருந்துகளுடன் பேருந்து நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9இலவச வைபை
•முக்கிய பேருந்து நிறுத்த நிழற்குடைகளிலும், முக்கிய சாலையோரப் பூங்காக்களிலும் கைபேசி சார்ஜிங் மற்றும் கட்டணமில்லா வைபை இணைய வசதி வழங்கப்படும்.
•கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே கடவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
•கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர், பட்டேல் நகர் இடையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை கடப்பதற்கு இருவழி மேம்பாலப் பணி துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி விரைந்து முடிக்கப்படும்.
•கொடுங்கையூர் எழில்நகர் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பயன்பெறும் வகையில் தனித்தனியே மயான பூமி அமைக்கப்படும்.
•இத்தொகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்கு சட்ட விதிமுறைகளின்படி பட்டா வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தீபா தேர்தல் அறிக்கை
தீபா தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
•புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர தின கொடியேற்ற பேசும்போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று போராடினார். அவரது ரத்த வாரிசான நான் அவரது வழியில் மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்.
• மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள், உபகரணங்கள் வாங்கி தருவேன்.
• காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கொள்ளளவும், பரப்பளவும் குறைக்கப்பட்டுள்ளதால் மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் தற்சமயம் உள்ள அளவினை மேலும் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன்.
•ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்திட சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
• குடிநீர் பிரச்சினையை தீர்த்து நல்ல சுகாதார வசதி செய்து தருவேன்.
• அனைத்து பகுதியிலும் பழுதடைந்த சாலைகளை சீர் செய்தல், புதிய தார்சாலை அமைத்தல், தெரு விளக்கு வசதி போன்றவை செய்து தருவேன்.
• ஆர்.கே.நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரண்டு அடுக்கு, மூன்று அடக்கு மேம்பாலங்கள் கட்டப்படும்.
• தினந்தோறும் குப்பைகளை அகற்றிட துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுப்பேன்.
• ரேஷன் கடைகளில் போதுமான அளவுக்கு தரமான அரிசி, பருப்பு வகைகள், பாமாயில், மண் எண்ணெய் வழங்கப்படும்.