ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப் பதிவு.. உற்சாகத்துடன் நீண்டவரிசைகளில் காத்திருக்கும் வாக்காளர்கள்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்னும் சில மணிநேரத்தில் தொடங்க உள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இன்றைய வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி காலமானார். இதையடுத்து அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத வகையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வந்தது. இன்று ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு. நாகராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள்.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இத்தொகுதியில் மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,10,903; பெண்கள்- 1,17,232; 3-ம் பாலினத்தவர் 99.
இன்று வாக்காளர்கள் வாக்களிக்க 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் ஒவ்வொரு வாக்குச் சாவடியில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது.
258 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 1638 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில் 15 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#TopStory RK Nagar bypolls to take place today, the constituency was once held by late TN CM Jayalalithaa. AIADMK’s E. Madhusudhanan, Independent candidate TTV Dhinakaran and DMK’s N. Marudhu Ganesh among the top contenders (Visuals from a polling booth in #Chennai) #TamilNadu pic.twitter.com/4kxqC6U42O
— ANI (@ANI) December 21, 2017
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும். வரும் 24-ந் தேதி ஞாயிறன்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.