மடப்புரம் கோவிலில் மது பாட்டில்களில் பன்னீர் விற்பனை... பெண் பக்தர்கள் அதிர்ச்சி!
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள கோவிலில் மதுபாட்டில்களில் அபிஷேக பன்னீர் அடைத்து விற்பனை செய்யப் படுவதால் பக்தர்கள் வேதனையும், அதிர்ச்சியுமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி யம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயிலில் உள்ள பத்ரகாளியம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வது பக்தர்களின் வழக்கம். இதற்காக பூஜை தட்டுகளில் பன்னீர் பாட்டில் தவறாது இடம் பெறும்.
நேற்றுமுன்தினம் ஆடி வெள்ளியை முன்னிட்டு இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பூஜை தட்டுகள் வாங்கச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுபாட்டில்களில் பன்னீர்...
கோயில் அருகே உள்ள அனைத்து கடைகளிலும், டாஸ்மாக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பன்னீர் மட்டுமே விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது. வேறு வழியின்றி அவற்றை வாங்கி சென்ற பெண்கள் பலருக்கு காலியான மது பாட்டில்களில் தான் மது அடைக்கப் பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
வேதனை...
அபிஷேகத்திற்காக இந்த பாட்டில்களை திறந்த பூசாரிகள், மது வாடை வீசியதும் தூக்கி எறிந்து விட்டனர். இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
கண்டனம்....
"அறநிலையத்துறை கீழ உள்ள கோயில்களில் மலிவு விலையில் பூஜை பொருட்களை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குடித்து விட்டு தூக்கி எறியப் படும் மது பாட்டில்களில் பன்னீரை விற்பனை செய்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
நடவடிக்கை....
இது தொடர்பாக பதிலளித்த கோயில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி, "குவார்ட்டர் பாட்டில்களில் பன்னீரை அடைத்து விற்பனை செய்ய கூடாது என பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.
குடிசைத் தொழில்...
மடப்புரத்தில் குடிசை தொழிலாக பன்னீரை தயாரித்து பாட்டில்களில் அடைத்து, கோயிலில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக சிலர் விற்பனை செய்து வருகின்றனர். முன்பு பன்னீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்த இவர்கள், சமீபகாலமாக டாஸ்மாக் கடைகளில் வீசி எறியப் படும் காலிபாட்டில்களில் பன்னீரை அடைத்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..