நீங்கள் மட்டும் ஆணாக இருந்திருந்தால்... விஜிலாவுக்கு எதிராக கொந்தளித்த குரியன்!
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று படு ஆவேசமாக பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த்துக்கு எதிராக துணைத் தலைவர் குரியன் கொந்தளித்து விட்டார். நீங்கள் மட்டும் ஆணாக இருந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்று அவர் கோபத்துடன் கூறினார்.
ராஜ்யசபாவில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சசிகலா தரப்பு மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் கடும் வாக்குவா4தத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டதால் துணைத் தலைவர் குரியனும் கோபமாகி விட்டார்.
ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசிக் கொண்டிருந்தபோது சசி தரப்பைச் சேர்ந்த விஜிலா குறுக்கிட்டு பேசிக் கொண்டே இருந்தார். விடாமல் அவர் பேசியதைப் பார்த்த குரியன் கோபமாகி விட்டார். உட்காருமாறு அவர் பலமுறை கூறியும் விடவில்லை விஜிலை. தொடர்ந்து ஆவேசமாக பேசியதால் மேலும் கோபமடைந்தார் குரியன்.
ஆவேசமடைந்த குரியன் எழுந்து நின்று, நீங்கள் என் சகோதரி போன்றவர். இப்படிசெய்யலாமா. உட்காருங்கள். இதுவே ஆணாக இருந்திருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன். ஒருவர் பேசும்போது குறுக்கிடாமல் இருந்தால்தான் அவர் பேசுவதை நான் கவனிக்க முடியும். அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமா என்பதை முடிவெடுக்க முடியும். இத்தனை கூறியும் அமர மறுத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது அநாகரீகமானது என்று அவர் கோபாவேசமாக கூறினார்.
விஜிலாவின் பேச்சு மற்றும் குரியனின் கோபம் இன்று ராஜ்யசபாவை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.