கூடங்குளத்தில் என்ன நடக்கிறது.. அணு உலை பற்றி வெள்ளை அறிக்கை கொடுங்க: சுப.உதயகுமார் கலெக்டரிடம் மனு
கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று சுப. உதயகுமார் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சுப.உதயகுமார் நெல்லை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமையில் அரசியல் கட்சியினர் நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு உலை திட்டத்துக்கு எதிராக கடலோர பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அணு உலை பூங்கா என்ற பெயரில் 6 உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகினறன. ஏற்கனவே இரண்டு அணு உலைகள் பராமரிப்பு இன்றி பல நாட்கள் நிறுத்தப்படுவதும், பின்னர் இயக்கப்படுவதும் தொடர்கிறது. முதல் இரண்டு உலைகளுக்கான கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில் இல்லை.
முதல் அணு உலை கடந்த 3 ஆண்டுகளில் 36 முறை நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையும் அடிக்கடி மூடப்படுகிறது. ஆபத்தான அணு கழிவுகளை அங்கே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவது ஆட்சியாளர்களின் வேலை ஆகும்.
அணு உலைக்கு வேண்டிய தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொள்வதாக கூறினார்கள். இப்போது தாமிரபரணி மற்றும் பேச்சிபாறை தண்ணீரை எடுக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தெரிகி்றது. மத்திய அரசு என்ன நினைத்து கொண்டிக்கிறது. தமிழகத்தை இடுகாடாக்க நினைக்கிறதா, மத்திய அரசு நினைத்தால் குஜராத்தில் நான்கு அணு உலைகளை அமைக்கலாமே, ஏன் தயங்குகிறதா என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.