தமிழ் சமூகத்தை இனி யாராலும் ஏமாற்ற முடியாது... சகாயம் ஐஏஎஸ் யாரைச் சொல்லி இருக்கிறார் தெரிகிறதா?
தமிழ் சமுதாயத்தை இனி யாராலும் ஏமாற்ற முடியாது, இளைஞர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழ்ச்சமூகத்தை இனி எவராலும் ஏமாற்ற முடியாது, இளைஞர்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து சகாயம் ஐஏஎஸ் இளைஞர்கள் மத்தியில் பேசிய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியலுக்கு நடிகர்கள் வருவது குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இளைஞர்கள் மத்தியில் நிலவுகிறது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இன்றைய இளைஞர்களின் முன் மாதிரியாக திகழ்கிறார் சகாயம்.
ஆனால் அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், இளைஞர்களை நல்வழியில் அழைத்து செல்லும் செயல்களை செய்து வருகிறார். இவரை ஊன்றுகோலாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் பாதை என்ற அமைப்பு லஞ்சத்தை ஒழிப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகின்றனர்.
குறைந்த விலை மருந்தகங்கள்
இதே போன்று குறைந்த விலையில் மருந்து, நியாயமான அரசியல் பாதை என்று தனியானதொரு பாதையில் இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இயற்கை வேளாண்மை, கைத்தறி ஊக்குவிப்பு, கார்ப்பரேட்டுகளின் அட்டகாசங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது என்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் மக்கள் பாதை அமைப்பினர்.
இளைஞர்களின் ரோல்மாடல்கள்
நேர்மையான அரசியல் என்ற பேச்சு வரும் போதெல்லாம் நல்லகண்ணு, சகாயம் போன்றோர்களின் பெயர்கள் தான் முதல் இடத்தில் நிற்கின்றன. இத்தகைய நிலையில் எதையும் அருதியிட்டு கணக்கிடும் சுகாயம் ஐஏஎஸ் 6 மாதங்களுக்கு முன்னரே ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
இளைஞர்கள் விழித்துவிட்டார்கள்
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்கள் மத்தியில் சகாயம் பேசும் போது, அவர் வந்துவிடுவாரோ, இவர் வந்துவிடுவாரோ என்று சொல்கிறார்கள். ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன், தமிழ்ச் சமூகத்தை இனி எவராலும் ஏமாற்ற முடியாது. இது பழைய காலமல்ல, இளைய சமுதாயம் இன்று விழித்துக் கொண்டார்கள் என்பதற்கு அடையாளமாகத் தான் மெரினாவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். ஊழல், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று பேசுகிறார்கள்.
இளைஞர்களால் மட்டுமே சாத்தியம்
ஊழல், லஞ்சம் என்பது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. லஞ்சம் எல்லா இடத்திலும் தலைவிரித்தாடுகிறது. 4 ஆண்டு காலத்தில் தமிழ் சமூகத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் இளைஞர்களால். லஞ்சம் இல்லாத நிலையை இளைஞர்களால் மட்டுமே கொண்டு வர முடியும், அதற்கு மக்கள் பாதை களம் அமைத்திருக்கிறது என்று சகாயம் தெரிவித்துள்ளார்.