சைதை துரைசாமி பெயர் இருட்டடிப்பு: ராஜினாமா தகவல் உறுதியாகிறது?
சென்னை: சென்னை மேயர் சைதை துரைசாமியின் ராஜினாமா வதந்தி வெளியாகியுள்ள நிலையில் அவரது பெயரை அதிமுகவினர் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களில் மேயரின் பெயர் இருந்தாலும் அதனை அதிமுகவினர் மறைத்து வருகின்றனர். ஜெயா டி.வியிலும் மேயரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
சைதை துரைசாமியை, உடனடியாக மேயர் பதவியை ராஜினாமா செய்ய, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டதாகவும், துணை மேயர் பெஞ்சமினை, போயஸ் கார்டன் வர சொல்லி இருப்பதாகவும் சனிக்கிழமையன்று மாலையில் தகவல் பரவியது.இத்தகவல், மாநகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுப்பான சைதை
இதுகுறித்து, மேயர் சைதை துரைசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''அப்படி எதுவும் இல்லை; இது வதந்தி, தொடர்ந்து அவர், செத்தவனிடமே செத்துவீட்டீர்களா என்று கடுப்படித்தார்.
அதேசமயம் மேயர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மேயர் ராஜினாமா செய்தால், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்க, மேயர் 'டம்மி'யாக்கி வைக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி கூட்டங்களை, இனி துணை மேயர் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர். இத்தகவலை, கட்சி மாவட்ட செயலர்கள், நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
மேயர் பெயர் இருட்டடிப்பு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆலயம்மன் கோவிலில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சிறப்பு பூஜை நடைபெறும் என ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு அதில் சைதை துரைசாமியின் பெயர் இடம்பெற்றிருந்தது.நேற்று அந்த பெயர் மறைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் மேயர் சைதை துரைசாமியின் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது உறுதியாகிறது.
பெயரை தவிர்த்த ஜெயா டிவி
இதனிடையே 'இந்தியா டுடே' பத்திரிகை சார்பில், சிறந்த மாநகருக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. நடந்தது. இதில், சென்னை மாநகருக்கு சிறந்த நகருக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பெற, சனிக்கிழமை காலை, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அமைச்சர்கள், டெல்லி புறப்பட்டு சென்றனர்.
ஒட்டுமொத்த சேவை, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் சென்னை சிறந்து விளங்குவதாக கூறி, இந்தியா டுடே அளித்த விருதுகளை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.சி.வீரமணி மற்றும் மேயர் சைதை துரைசாமி பெற்றுக்கொண்டனர். ஆனால், இந்த செய்தியை நேற்று இரவு 07:15 மணிக்கு ஒளிபரப்பிய ஜெயா டி.வி., சென்னைக்கான விருதுகளை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தது. மேயர் சைதை துரைசாமி பற்றி எந்தவித தகவலையும் அந்த டிவி ஒளிபரப்பவில்லை.
சென்னை மேயர் சைதை துரைசாமியை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் பரவியுள்ள சூழ்நிலையில் மேயர் பெயரை ஜெயா டி.வி புறக்கணித்திருப்பது, பதவி நீக்க உத்தரவு தகவலை உறுதி செய்வதாக உள்ளது.
பின்னணி என்ன?
அ.தி.மு.க.,வை சேர்ந்த சைதை துரைசாமி கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கினார் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தோல்வியை தழுவினார்.
அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், அவர் சென்னை மேயர் வேட்பாளராக, களம் இறக்கப்பட்டு, வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சியின், முதல் அ.தி.மு.க., மேயர் என்ற பெருமை பெற்றவர்.
அதன்பின், ஜெயலலிதாவை மகிழ்விக்கும் வகையில், 'அம்மா உணவகம், அம்மா திரையரங்கம்' என, பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.மாநகராட்சி கூட்டங்களில், முன்னாள் தி.மு.க., மேயர்களான ஸ்டாலின், சுப்பிரமணியன் ஆகியோர் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். குற்றச்சாட்டு உண்மையெனில் வழக்கு தொடருங்கள் என, அவர்கள் கூறிய பின்பும், வழக்கு எதுவும் தொடரப்படவில்லை.
பண்ணை வீடு
இந்நிலையில், கடந்த, 20ம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திலும், வழக்கம்போல் சைதை துரைசாமி, முன்னாள் மேயர்கள் சுப்பிரமணியன் மற்றும் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதிற்கு பதில் அளித்த, முன்னாள் மேயர் சுப்பிரமணியன், 'சிறுதாவூர், கோடநாடு பங்களாக்களுக்கு இணையாக, ராஜகீழ்ப்பாக்கத்தில், 10 ஏக்கர் பண்ணை வீடு எப்படி வந்தது?' என, கேள்வி எழுப்பினார்.இது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதான் சைதை துரைசாமியை அதிமுக தலைமை டம்மியாக்க காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications