நள்ளிரவில் நடக்கும் சமாதி ஸ்டன்டுகள்.. தமிழக அரசியலின் அவல நிலை
சமாதி அரசியல் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது மக்களுக்கு பெரும் இம்சையாக மாறியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதுபோன்ற அரசியல் தமிழகத்தில் காலூன்றிவிட்டதை பற்றி கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் நள்ளிரவு சமாதி தியான அரசியல் மக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சமாதி தியான அரசியலுக்கு அடிபோட்டு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் இப்போது ஆளாளுக்கு கிளம்பிவிட்டனர்.
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். அம்மாவின் ஆன்மா பேசுவதாகவும் கூறிய பன்னீர்செல்வம், அதிரடியாக சசிகலாவுக்கு எதிராக திரும்பினார்.
பழைய பன்னீர்செல்வம்
அதுவரை மாணிக்கம் போல காட்சியளித்த பன்னீர்செல்வம் பிறகு பாட்ஷா பாய் போல விஸ்வரூபம் எடுத்ததை ஹீரோயிச சினிமாக்கள் பார்த்து பழக்கப் பட்ட நமது மக்கள் உச்சுக்கொட்டி ரசித்து, விசிலடித்து, கைதட்டி, தரையில் உருண்டு ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
சமாதியில் மாஜிக்கா இருக்குது
சசிகலா முதல்வராகிவிடக்கூடாது என்ற பெருவாரி மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்ததால் பன்னீருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு இது. ஆனால், இப்படி சமாதியில் தியானம் செய்தாலே பெரியாளாகிவிடலாம் என, அண்ணாமலை படத்தில் ஒரே பாடலில் பணக்காரராகும் ரஜினி கதாப்பாத்திரத்தை கற்பனையில் நிறுத்திக்கொண்டு களமிறங்கிவிட்டனர் அரசியல் அடிபொடிகள்.
ஆளாளுக்கு கெளம்புறாங்களே
அதில் லேட்டஸ்ட்தான் தீபா மற்றும், அவரது கணவர் மாதவன். மார்ச் 12ம் தேதி இரவு தீபா இப்படித்தான் 45 நிமிடங்கள் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்திருந்து தியானம் செய்கிறேன் பேர்வழி என அசையாமல் அமர்ந்துவிட்டார். பிறகு, பேட்டியளித்தபோது, தன்னை ஆர்.கே.நகரில் போட்டியிட கூடாது என மிரட்டல் வருவதாக குற்றம்சாட்டினார்.
என்னா அடி
முன்னதாக பிப்ரவரி 15ம் தேதி பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அவர் சமாதியை மூன்று முறை ஓங்கியடித்து சத்தியம் செய்துவிட்டு சிறைக்குள் சென்று அடைபட்டார். பழிக்கு பழி வாங்கப்போகிறேன் என சத்தியம் செய்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறின.
பெரும் இம்சை
சமாதி அரசியல் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது மக்களுக்கு பெரும் இம்சையாக மாறியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதுபோன்ற அரசியல் தமிழகத்தில் காலூன்றிவிட்டதை பற்றி கண்டனம் தெரிவித்திருந்தார். இரவு நேரங்களில் பரபரப்பை கிளப்புகிறேன் என பத்திரிகையாளர்களையும், பொதுமக்களையும் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் போக்கு என்று நிற்குமோ அது ஜெயலலிதா ஆன்மாவுக்குத்தான் வெளிச்சம் போலும்.