சுயமரியாதையை இழக்காத வகையில் ச.ம.க கூட்டணி அமைக்கும்: ராதிகா சரத்குமார்
சென்னை: சரத்குமாரின் சுயமரியாதையை இழக்காத வகையில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் "சமத்துவ சக்தி" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராதிகா சரத்குமார், நாட்டில் 48 சதவீதம் பெண்கள் உள்ளபோதிலும், அரசுப் பணிகளில் மகளிர்களின் பங்கு என்பது வெறும் 11 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.
அரசுப் பணிகளிலும், ஆட்சிப் பணிகளிலும் பெண்கள் பெருமளவில் வருவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். பெண்கள் அரசியலில் மிகுந்த ஆர்வம் காண்பிக்க வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும் என்றும் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது சமத்துவ மக்கள் கட்சி. கட்சித் தலைவர் சரத்குமார் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலும், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் நான்குநேரி தொகுதியிலும் வெற்றி பெற்று சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைந்தனர். ஆனால் தற்போது எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதனிடையே கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அதிமுக கூட்டணியில் நீடித்த சமத்துவ மக்கள் கட்சி. அதிமுக தங்களை வளரவிடவில்லை, கறிவேப்பிலையாக பயன்படுத்தியது என்ற பரபரப்புக் குற்றச்சாட்டுடன், சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார். இதையடுத்து பாஜக கூட்டணிக்கு சரத்குமார் சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.